×

விளையாட்டுத்துறையில் சிபாரிசு இருக்க கூடாது: சென்னை பத்திரிகையாளர் மன்றம், இந்தியன் ஆயில் இணைந்து நடத்திய கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்து சபாநாயகர் பேச்சு

சென்னை: விளையாட்டு துறையில் சிபாரிசு இருக்கக்கூடாது, சிறந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என தமிழக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார். சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சென்னை பத்திரிகையாளர் மன்றம் மற்றும் இந்தியன் ஆயில் இணைந்து நடத்திய கிரிக்கெட் போட்டியை தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் தொடங்கி வைத்து, வீரர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

முன்னதாக அவர் பேசியதாவது:
விளையாட்டு துறையைப் பொறுத்தவரை இப்போது ஒரு ஒளிமயமான எதிர்காலம் தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். விளையாட்டு துறையை நன்கு அறிந்திருக்கும் ஒரு அமைச்சரை நியமிப்பதன் மூலமாக தமிழ்நாடு முழுவதும் ஒரு நிர்ணயத்துடன் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும், ஒரு புத்துணர்ச்சி ஏற்பட வேண்டும் என விளையாட்டு துறையின் மறுமலர்ச்சியின் காலம் என்று மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கின்ற அளவில் பல திட்டங்கள் எல்லாம் இன்றைக்கு தயார்படுத்தப்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள்.

விளையாட்டு துறையில் சிபாரிசு இருக்கக்கூடாது, சிறந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு கிராமப்புறத்திலிருந்து சீராக செம்மையாக நகர்ப்புறம் வரைக்கும் சம வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும். ஒரு பக்கம் ஆள் தெரிந்தவர்கள், பணபலமிக்கவர்கள் அல்லது புகழக்கூடியவர்களை சார்ந்து சிலருக்கு மட்டும்தான் அந்த வாய்ப்பு விளையாட்டு துறையில் கிடைக்கிறது என்கிற நிலைமை எல்லாம் மாறி, உண்மையாக களத்தில் இறங்கி திறமையாக விளையாடக்கூடிய இன்னும் நாம் அடையாளம் காணாத பலரை அடையாளம் காணக்கூடிய காலம் உருவாக வேண்டும். சிபாரிசுக்கு இடம் இருக்கக்கூடாது. ஜாதி, மதம், மொழி, இனம் விளையாட்டுத் துறையில் குறுக்கிடக்கூடாது.

எந்தக் காலகட்டத்திலும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கக்கூடிய ஆற்றல் மிக்கவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கின்ற அடிப்படையில்தான் இந்த அரசு இன்றைக்கு பல முனைப்பான திட்டங்களை தீட்டி வருவதை ஊடகங்கள் வாயிலாக நாம் தெரிந்துகொள்ள முடிகிறது. ஒரு ஒளிமயமான எதிர்காலம் விளையாட்டுத் துறையில் இருக்கிறது. ஒரு விளையாட்டு வேகமாக வளர்ந்து வருவதையும், மற்ற விளையாட்டுகளுக்கு உரிய பொருளாதார நிதிப் பற்றாக்குறை காரணமாகவும் சிறந்த விளையாட்டு நிகழ்வுகளை இந்திய அளவில் நம்மால் ப்ரொஜெக்ட் செய்ய முடியவில்லை என்பதையும் நான் பார்க்க முடிந்தது. ஆனால் அந்த நிலைமை எல்லாம் இன்றைக்கு மாறி வருகிறது.

நம்முடைய பத்திரிகையாளர் மன்றம் எடுத்திருக்கும் இந்த முயற்சியை நான் பாராட்டுகிறேன். இரண்டாம் ஆண்டாக நடத்துகிறீர்கள். தொடர்ந்து நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

இதை தொடர்ந்து இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) தென் மண்டல செயல் இயக்குநரும், மாநில தலைவருமான வி.சி.அசோகன் பேசியதாவது:
இந்தியன் ஆயில் விளையாட்டுக்காக ஒரு ஊக்குவிக்கும் காரணியாக இருப்போம். இந்தியாவில் பல போட்டிகளுக்கு ஸ்பான்சர் வழங்கியுள்ளோம். விளையாட்டு என்பது ஆரோக்கியத்திற்கு சமமானது. சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு தொடர்ந்து எங்களது ஆதரவு வழங்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் தென் மண்டல மேலாண்மை இயக்குநர் ஏ.மகேஷ், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஆர்.சி.பாலகனகராஜ், அகில இந்திய வழக்கறிஞர்கள் கிரிக்கெட் சங்கத் துணை தலைவர் எம்.வேல்முருகன், சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Chennai Press Forum ,Indian Oil ,Chennai ,Tamil ,Nadu ,Speaker ,J. C. D. Prabhakar ,INDIAN OIL CO ,CHAIAPPAN COLLEGE ,CHAIAPPAN, CHENNAI ,
× RELATED இடைத்தேர்தலில் தனி அணி மார்க்சிஸ்ட் சண்முகம் தகவல்