செங்கல்பட்டு, ஜூலை 18: செங்கல்பட்டு அரசினர் சிறப்பு இல்லத்தில் சிறார்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு சிறுவனுக்கு மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டில் அரசினர் சிறப்பு இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகம் முழுவதும் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்ட சிறார்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு வழக்கம்போல் தங்களது அறையில் படுத்து கொண்டிருந்த சிறார்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவனை 10க்கும் மேற்பட்டோர் ஒன்றாக சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் தலையில் படுகாயமடைந்த சிறுவனை மீட்ட அரசினர் சிறப்பு இல்ல ஊழியர்கள் அவரை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். தலை முழுவதும் பலத்த காயமடைந்த சிறுவனுக்கு 22 தையல்கள் போடப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து செங்கல்பட்டு நகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு நகர போலீசார் சிறுவர்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
