செங்கல்பட்டு, ஜூலை 16: செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட கொளத்தாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் மணிமாறன் (29). இவர் காஞ்சிபுரம் மாவட்டம், வாண்டரவாசி பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். தினமும் வேலைக்கு சென்று வந்தவுடன் வீட்டுக்கு வெளியே கட்டிலில் தூங்குவது வழக்கம். இந்தநிலையில், கடந்த 5 நாட்களாக மணிமாறன் வேலைக்குச் செல்லாமல் நண்பர்களோடு குடித்துவிட்டு சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது.
அதனை மணிமாறனின் தாய் கண்டித்தாக கூறப்படுகிறது. இனிமேல் வேலைக்குச் செல்கிறேன் எனக் கூறிவிட்டு, சாப்பிட்ட பின் வழக்கம்போல் நேற்று முன்தினம் மணிமாறன் இரவு 9 மணிக்கு வீட்டின் வெளியே தூங்கியுள்ளார். அவரது தாய் நேற்று அதிகாலை பார்த்தபோது வெளியே உறங்கிய மணிமாறனை காணவில்லை. வீட்டை சுற்றி பார்த்தபோது, வீட்டின் அருகே உள்ள உள்ள புளிய மரத்தில் புடவையால் தூக்கிட்டு சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பாலூர் போலீசார் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
