×

அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் உறுப்பினராக ஆன்லைனில் பதிவு செய்யலாம்

 

 

காஞ்சிபுரம் ஜூலை 15: தமிழக அரசின் தொழிலாளர் துறையின் கீழ் 20 தொழிலாளர் நல வாரியங்கள் அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. 18 வயது முதல் 60 வயதிற்கு உட்பட்ட கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்கள் தாங்கள் பணிபுரியும் தொழிலின் தன்மைக்கேற்ப உரிய தொழிலாளர் நல வாரியங்களில் உறுப்பினராக வாரிய இணையதளத்தின் வாயிலாக பதிவு செய்த பிறகு 60 வயது பூர்த்தியாகும் வரையில் 5 ஆண்டுக்கு ஒரு முறை பதிவினை வாரிய இணையதளத்தின் வாயிலாக புதுப்பித்துக்கொள்ள வேண்டும். பதிவு பெற்ற உறுப்பினர்கள் கல்வி, திருமணம், மகப்பேறு, ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்து மரணம் உள்ளிட்ட பல்வேறு நிதி உதவி கோரும் கேட்பு மனுக்களை வாரிய இணையத்தின் வாயிலாக விண்ணப்பித்து பயன் பெறலாம்.

வாரியங்களில் உறுப்பினர்களாக பதிவு செய்த நாள் வரையில் நிதி உதவி பெறாதவர்கள் அந்த தேதியில் தங்களுக்குரிய நிதி உதவி கோரும் கேட்பு மனுவினை இணைய வழியில் விண்ணப்பித்து பயன்பெறலாம். 60 பூர்த்தியாகாத நிலையில் வாரிய பதிவினை புதுப்பிக்காதவர்கள், பதிவினை இணைய வழியில் புதுப்பித்து அரசின் நல திட்ட உதவிகளை பெற்று பயன்பெறலாம். பதிவு, புதுப்பித்தல் மற்றும் கேட்பு மனுக்கள் விண்ணப்பிப்பதற்கு கட்டணம் ஏதும் இல்லை. மேலும் விவரங்களுக்கு காஞ்சிபுரம், ஓரிக்கை, அண்ணா நெசவாளர் குடியிருப்பில் அமைந்துள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி) அலுவலகத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ (044-29593177) தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சினேகா தெரிவித்துள்ளார்.

 

Tags : Kanchipuram ,Tamil Nadu government ,
× RELATED ரூ.3 கோடி நிலம் ஆக்கிரமிப்பு: கலெக்டரிடம் மூதாட்டி மனு