×

மதுபோதையில் குடும்பத்தினரை தவறாக பேசியதால் ஆத்திரம்: கறிக்கடை தொழிலாளி கல்லால் அடித்து கொலை

பெரும்புதூர், ஜூலை 17: சோமங்கலம் அருகே காரில் அழைத்துச் சென்று மது அருந்தியபோது, போதையில் குடும்ப உறுப்பினர்கள் குறித்து தவறாக பேசியதால், ஆத்திரத்தில் கறிக்கடை தொழிலாளியை கல்லால் அடித்துக் கொன்ற இருவரை, ேபாலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் அடுத்த சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (32). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர், அதே பகுதியில் உள்ள கறிக்கடையில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த தங்கம், ஆனந்தஜோதி ஆகிய 2 பேர் காரில் வந்து, ராஜேஷை மது அருந்த அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர், இரவு முழுவதும் ராஜேஷ் வீடு திரும்பாததால், அவரது உறவினர்கள் பல இடங்களில் அவரை தேடி வந்துள்ளனர்.

இதனிடையே, ராஜேஷுடன் மது அருந்திய தங்கம், ஆனந்தஜோதி ஆகிய 2 பேரும், நேற்று காலை சோமங்கலம் காவல் நிலையத்திற்கு வந்து, மதுபோதையில் ராஜேஷை அடித்து கொலை செய்து விட்டதாக சரணடைந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், 2 பேர் கொடுத்த தகவலின்பேரில், சேத்துப்பட்டு – சோமங்கலம் சாலையையொட்டி மது அருந்தச் சென்ற இடத்துக்கு சென்று, முகம் சிதைந்த நிலையில் கிடந்த ராஜேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கறிக்கடை தொழிலாளியான ராஜேஷ் மற்றும் தங்கம், ஆனந்தஜோதி ஆகிய 3 பேரும் மது அருந்தியதும், அப்போது மதுபோதையில் இருந்த ராஜேஷ், இருவரின் குடும்ப உறுப்பினர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் ஆத்திரமடைந்து இரும்பு கம்பி, கல்லை கொண்டு ராஜேஷின் தலையில் தாக்கி கொலை செய்ததும், பின்னர் தங்கம், ஆனந்தஜோதி ஆகிய 2 பேரும் காவல் நிலையத்தில் சரணடைந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, கொலையாளிகள் 2 பேரை கைது செய்த போலீசார், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும், 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Somangalam ,Kanchipuram district ,Somangalam… ,
× RELATED செங்கல்பட்டு அரசினர் சிறப்பு இல்லத்தில் 15 வயது சிறுவனுக்கு மண்டை உடைப்பு