×

குண்டும் குழியுமாக உள்ள சிறுங்குன்றம் சாலையை சீரமைக்க வனத்துறை ஒப்புதல் கிடைக்குமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

திருப்போரூர், ஜூலை 17: சிறுங்குன்றம் சாலையை சீரமைக்க வனத்துறை ஒப்புதல் கிடைக்குமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர். திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் சிறுங்குன்றம் கிராமம் உள்ளது. இந்த, கிராமத்திற்கு வனப்பகுதியை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையில் தனியார் கல்லூரி, தனியார் மெட்ரிக் பள்ளி, தொழிற்சாலை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் போன்றவை உள்ளன. பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், தனியார் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு மட்டும் சுமார் 20க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், சிறுங்குன்றம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிறுங்குன்றம், வெங்கூர், மேலையூர், நந்தம்பாக்கம், கொண்டங்கி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் என ஏராளமானோர் தினசரி வந்து செல்கின்றனர்.

செங்கல்பட்டு செல்லும் பிரதான சாலையில் இருந்து சிறுங்குன்றம் கிராமத்திற்கு செல்லும் சாலை வனத்துறையால் ஏற்பட்ட தடையால் புதிதாக அமைக்க முடியாத நிலை உள்ளது. இதனால், ஜல்லிக்கற்கள் ெபயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இது தொடர்பாக சிறுங்குன்றம் ஊராட்சி சார்பிலும், திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பிலும் பலமுறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அனுப்பியும் வனத்துறை ஒப்புதல் கிடைக்காததால் இதுவரை புதிய சாலை அமைக்க முடியாத நிலை உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் நேரடியாக வனத்துறைக்கு விண்ணப்பித்து, சேதமடைந்த சாலையை அகற்றிவிட்டு புதிய சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Forest Department ,Sirungunram road ,Thiruporur ,Sirungunram ,Chengalpattu ,
× RELATED செய்யூரில் புனித தோமையார் திருநாள் திருப்பலி