மாதவரம், ஜூலை 18: கொளத்தூரில் போலி தங்க நகைகளை அடகு வைத்து ரூ.97 ஆயிரம் மோசடி செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.சென்னை திருவிக நகர் ராமமூர்த்தி காலனி பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வர் குமார் (62). இவர், கொளத்தூர் ஏரிக்கரை தெரு பகுதியில் அடகு கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கடந்த 2 வருடமாக கார்த்திகா என்ற பெண் வேலை செய்து வருகிறார். கடந்த 11ம் தேதி ஈஸ்வர் குமார் மருத்துவ சிகிச்சைக்காக தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது, இவரது அடகு கடைக்கு வந்த பிரகாஷ் என்பவர் ஒன்றரை சவரன் பிரேஸ்லெட்டை அடகு வைத்து ரூ.97 ஆயிரம் கேட்டுள்ளார். அடகு கடையில் இருந்த கார்த்திகா தனது கடை உரிமையாளரிடம் தொலைபேசியில் தகவல் தெரிவித்து, அவர் கூறியதன் அடிப்படையில் ரூ.97 ஆயிரத்தை கொடுத்தார்.
இரவு 9 மணியளவில் கடை உரிமையாளர் ஈஸ்வர் குமார் அடகு கடைக்கு வந்து பிரேஸ்லெட்டை சோதனை செய்தபோது அது போலி என தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஈஸ்வர் குமார் கொளத்தூர் குற்ற பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மற்றும் போலீசார் கடையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பெரம்பூர் ரமணா நகர் கவுதமபுரம் பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் (28), இன்பரசு (44) ஆகியோரை நேற்று கைது செய்தனர்.இவர்கள் பிரகாஷ் என்ற பெயரில் போலி ஆதார் கார்டு தயார் செய்து, அடகு கடையில் உள்ள பகுதியில் வசிப்பவர் போல ஏமாற்றி கடையின் உரிமையாளர் இல்லாத நேரத்தில் போலி தங்க நகையை கொடுத்து பணம் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
