பூந்தமல்லி, ஜூலை 17: பூந்தமல்லி நகராட்சி உட்பட்ட பொது இடங்களில் குப்பை மற்றும் கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் சரவணக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளில் ஏறக்குறைய 38,032 வீடுகளும், மக்கள் தொகை 1,31,436 என்ற அளவிலும் உள்ளது. தினசரி இந்நகருக்கு வந்து செல்லும் மக்கள் தொகை 50,000 முதல் 1,00,000 என்ற அளவிலும் உள்ளது. இந்நிலையில், தினசரி 32 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் உருவாகும் இந்நகராட்சியில் 188 ஒப்பந்த தூய்மை பணியாளர்களும், 31 நகராட்சி தூய்மை பணியாளர்களும் நாள்தோறும் தூய்மை பணியில் ஈடுபடுகின்றனர். மேலும், தினசரி உருவாகும் திடக்கழிவுகள் தொடர்ந்து நகராட்சி வாகனங்கள் மற்றும் ஒப்பந்த வாகனங்கள் மூலமாக அகற்றப்படுகின்றன. எனினும், பொதுமக்கள் மற்றும் பாதசாரிகள் தெருவோரங்களில் திடக்கழிவுகளை வீசி செல்கின்றனர்.
நகராட்சி நிர்வாகம் பலமுறை அறிவுறுத்தியும் குப்பை போடும் இடங்களில் விளம்பரப் பலகை வைத்தும், தொடர்ந்து பொது இடங்களில் குப்பைகள் வீசி செல்வது தொடர்கிறது. இது தொடர்பாக நகர்மன்ற உறுப்பினர்களிடம் இருந்தும் புகார்கள் வந்து கொண்டு இருந்ததால் நகர்மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் ஆலோசனையின் பேரில் பல இடங்களில் திடக்கழிவுகளை அகற்றிய பிறகும், பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள், நினைத்த நேரத்தில் கழிவுகளை அகற்றிய இடத்தில் மீண்டும் மீண்டும் குப்பைகள் கொட்டி வருகின்றனர்.வாகனங்கள், வீடுகள் தோறும் சென்று திடக்கழிவுகளை அகற்றிய பிறகும், பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் தங்களுக்கு ஏதுவான நேரத்தில் திடக்கழிவுகளை தெருவில் கொட்டி விடுகின்றனர்.
இந்த செயல் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். இந்நகர் பகுதியில் உள்ள சிறு தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் அனைவரும் தங்களிடம் உள்ள திடக்கழிவுகளை புதிய திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026-ன் படி நான்கு தொட்டி அமைப்பு முறையில் ஈரக்கழிவுகள், உலர்கழிவுகள், சுகாதார கழிவுகள் மற்றும் சிறப்பு பராமரிப்புக் கழிவுகள் என பிரித்து மக்கும் குப்பைகளை பச்சை நிறக் குப்பைத் தொட்டியிலும், மறுசுழற்சி செய்யக்கூடிய உலர் கழிவுகளை நீல நிறக் குப்பை தொட்டியிலும், சுகாதார கழிவுகளை சிவப்பு நிறக் குப்பைத் தொட்டியிலும் மற்றும் பிற அபாயகரமான கழிவுகளை கருப்பு நிறக் குப்பை தொட்டியிலும் பிரித்து வைத்து நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் வாகனத்தில் ஒப்படைத்திட வேண்டும். மிக முக்கியமாக ஹாட்ஸ்பாட் பகுதிகளை தூய்மை செய்த பிறகு அவ்விடங்களில் குப்பைகளை கொட்டக்கூடாது என்பதால் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மீறி தெருவில் கொட்டுபவர்கள் மீது 2023 நகர்ப்புற உள்ளாட்சி விதிகள் படி நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
