திருத்தணி, ஜூலை 15: பொதட்டூர்பேட்டை காவல் ஆய்வாளர் சந்தோஷ் குமார் தலைமையிலான போலீசார் ஆந்திர செல்லும் நகரி மாநில நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, நகரியிலிருந்து பொதட்டூர்பேட்டை நோக்கி வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி, அதில் இருந்த மூட்டையை ஆய்வு செய்தபோது குட்கா கடத்தி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, பைக்குடன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில், அவர் திருத்தணி அருகே எஸ்.அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை(54) என்றும், அவர் அதே கிராமத்தில் மளிகை கடை நடத்தி வருவதும், ஆந்திர மாநிலம் நகரியில் இருந்து 22 கிலோ குட்கா வாங்கிக் கொண்டு பொதட்டூர்பேட்டை வழியாக எஸ்.அக்ரஹாரம் செல்லும்போது பிடிபட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் ஏழுமலையை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
