திருவள்ளூர் அருகே கஞ்சா விற்ற வடமாநில வாலிபர்கள் இருவர் கைது

 

திருவள்ளூர், ஜூலை 16: திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், மப்பேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா கடத்தப்படுவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மாவட்ட போலீஸ் எஸ்பி சாய் பிரனீத் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார், நேற்று காலை பேரம்பாக்கம் பகுதியில் தீவிரமாக ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக கையில் பையுடன் சென்று கொண்டிருந்த வடமாநில வாலிபரை பிடித்து விசாரித்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். சந்தேகமடைந்த போலீசார், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் 3.5 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார், அவரை கைது செய்து நடத்திய விசாரணையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த ராகேஷ் குமார் (27) என்பதும், இவர் விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. மேலும், அவரிடமிருந்து 3.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, மப்பேடு போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம், பீகார் மாநில வாலிபர் ராகேஷ்குமார் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

இதேபோல், மாவட்ட போலீஸ் எஸ்பி சாய் பிரனீத் உத்தரவின்பேரில், மப்பேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வயலூர் சுடுகாடு அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பைக்கில் சந்தேகத்திற்கிடமாக நின்றிந்து நபரை பிடித்து சோதனை செய்தபோது 6.5 கிலோ கஞ்சா சிக்கியது. அவரை கைது செய்து போலீசார் விசாரித்தனர். அதில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பாபுலு பிரதான்(34) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் 6.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து பாபுலு பிரதானை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Related Stories: