ரேவா: மத்தியப் பிரதேசத்தில் மூன்று மாதங்களாகத் தேடப்பட்டு வந்த வாலிபர் அவரது மனைவியால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்யப்பட்டுள்ளார். மத்தியப் பிரதேசம் சாத்னா மாவட்டத்தைச் சேர்ந்த விபின் குமார் யாதவ் (20) என்ற வாலிபர் கடந்த மார்ச் 26ம் தேதி தனது மாமியார் வீட்டிற்குச் சென்றார். அதற்கு அடுத்த நாளான மார்ச் 27ம் தேதி முதல் யாரிடமும் தொடர்பு கொள்ளாமல் மாயமாகியுள்ளார்.
இதுகுறித்து அவரது தந்தை சந்து யாதவ் மார்ச் 28ம் தேதி ராம்பூர் பாகேலன் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்த விசாரணையில், மாயமான விபின் குமார் யாதவின் கடைசி செல்போன் இருப்பிடம் திகர் கிராமம் என்பதைக் கண்டறிந்த போலீசார், அவரது மனைவியின் செல்போன் அழைப்பு விவரங்களை ஆய்வு செய்தபோது, அவருக்கும் சுனில் குஷ்வாகா என்ற நபருக்கும் இடையே அடிக்கடி நீண்ட நேரம் செல்போனில் பேச்சுகள் நடந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, விபின் குமார் யாதவின் மனைவியின் வீட்டில் வைத்து சுனில் குஷ்வாகாவை போலீசார் கைது செய்து விசாரித்ததில், விபின் குமார் யாதவை மார்ச் 27ம் தேதியே கழுத்தை நெரித்துக் கொலை செய்து கிணற்றில் வீசியதையும், பின்னர் உடல் மிதந்ததால் பயந்துபோய் அதனை வெளியே எடுத்து வீட்டிற்கு அருகில் உள்ள வடிகால் அருகே 300 மீட்டர் தொலைவில் புதைத்ததையும் ஒப்புக்கொண்டார்.
அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், நேற்று முன்தினம் கோட்டாட்சியர் முன்னிலையில் தோண்டப்பட்டதில் முற்றிலும் அழுகிய நிலையில் விபின் குமார் யாதவின் உடல் மீட்கப்பட்டு நேற்று பிரேத பரிசோதனை செய்ய அனுப்பப்பட்டது. இதுகுறித்து கூடுதல் எஸ்பி சந்தீப் மிஸ்ரா கூறுகையில், ‘கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளான சுனில் மற்றும் விபின் குமார் யாதவின் மனைவி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்’ என்றார்.
