காரைக்குடி: காரைக்குடி மெ.மெ. வீதியை சேர்ந்தவர் பழனி குமார். இவரது மனைவி லட்சுமி இந்த தம்பதியருக்கு மூன்று பெண் குழந்தைகள் இருந்த நிலையில் நான்காவதாக பெண் குழந்தை காரைக்குடி அரசு மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் மாதம் பிறந்தது.
மருத்துவமனையில் லட்சுமி இருந்தபோது அருகில் இருந்த பெண் ஒருவர் குழந்தையை வேறு யாரிடமாவது வளர்க்க கொடுத்து விடலாமா என நைசாக பேசி குழந்தை விற்பனைக்கு ஈடுபட்டுள்ளார். ஆனால் லட்சுமி அதற்கு சம்மதிக்கவில்லை. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 4ம் தேதி லட்சுமி குழந்தையுடன் வீட்டிற்கு டிஸ்சார்ஜ் ஆகி வந்துள்ளார்.
வீட்டுக்கு வந்த பிறகு அவர்களை தொடர்பு கொண்ட சென்னையை சேர்ந்த ஒரு தம்பதியினர் குழந்தையை கேட்டு வற்புறுத்தி உள்ளனர். அவர்கள் தர மறுக்கவே அடிக்கடி வந்து தொந்தரவு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று லட்சுமி அவரது மூத்த மகளுடன் வீட்டில் இருந்தபோது அங்கு வந்த பெண்மணி குழந்தையை கையில் வாங்கிவிட்டு மூன்று லட்ச ரூபாயை கொடுத்துவிட்டு குழந்தையுடன் மாயமாகிவிட்டார்.
திகைத்த தாயார் தன் கணவரிடம் இந்த விஷயத்தை கூறியுள்ளார். அதன் அடிப்படையில் இன்று லட்சுமி காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை தேடி வருகிறார்.
