திருச்சி அருகே இளம்பெண் பலாத்கார கொலை: கொலையாளியை கைது செய்யக்கோரி 50 கிராம மக்கள் மறியல் போராட்டம்

சமயபுரம்:திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்தவர் 32 வயது இளம்பெண். விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் 30ம்தேதி இரவு இளம்பெண், தனது வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள மாட்டு கொட்டகைக்கு மாட்டுக்கு வைக்கோல் போட சென்றவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் 1ம்தேதி மதியம் சிறுகளப்பூர் ஏரியின் தண்ணீர் பகுதியில் உள்ள முட்புதரில் நிர்வாண கோலத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டு கிடந்தது தெரிய வந்தது.

திருச்சி எஸ்பி டோங்ரோ பிரவீன் உமேஷ், லால்குடி டிஎஸ்பி ராஜமோகன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சிறுகளப்பூர் பகுதிகளில் உள்ள கிரஷர் நிறுவனங்கள் மற்றும் காற்றாலை நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர். ஆனால் இதுவரை கொலையாளிகள் சிக்கவில்லை.

இந்நிலையில் பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சிறுகளப்பூர், பெருகளப்பூர், அருந்தலைப்பூர், நம்புக்குறிச்சி, ஊட்டத்தூர், பி.கே.அகரம், தாத்தம்பட்டி உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 2,000 பேர் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை நெடுங்கூரில் நேற்று காலை 9.50 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதில் திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருவழிகளிலும் சாலையில் அமர்ந்து மக்கள் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த எஸ்பி டோங்கரே பிரவீன் உமேஷ், லால்குடி டிஎஸ்பி ராஜமோகன் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எஸ்பி, ஒரு வாரத்திற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்தார். இதனைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories: