சிவகாசி: விருதுநகரைச் சேர்ந்தவர் கீர்த்தனா. இவர், தவெகவில் சேர்ந்து 30 நாட்களில் சிவகாசி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாகி அமைச்சரானார். ஆனால், இவரது பேச்சு, செயல்பாடுகள் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. சட்டமன்றத்தில் எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழாவிற்கு சென்ற கீர்த்தனா வெற்றி சான்றிதழை எடுக்காமல் சென்றார். இந்த ஒரு சாதாரண விஷயம் கூட தெரியாமல் இருக்கும் அவருக்கு எப்படி அமைச்சர் பதவி கொடுத்தனர் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர். எம்எல்ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கீர்த்தனா, மாற்றுத்திறனாளிகள் குறித்துப் பயன்படுத்திய வார்த்தை பெரும் கண்டனத்துக்குள்ளானது.
இதற்காக அவர் பகிரங்க மன்னிப்பு கோரினார். இந்த நிலையில், கடந்த ஜூன் 15ம் தேதி சொந்த மாவட்டமான விருதுநகரில் அமைச்சருக்கான அரசு வாகனத்தில் தவெகவினர் சென்றது, முதலீடுகளை ஈர்க்க தொழிலதிபர்களுக்கு ரீல்ஸ் மூலம் அழைப்பு விடுத்தது என சர்ச்சையில் சிக்கினார். இந்நிலையில், கடந்த 3ம் தேதி திருத்தங்கல் சீ.ரா.அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கீர்த்தனா, ஒரு மாணவியிடம் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பினர். இதற்கு மாணவி பதில் அளிக்காததால் அந்த மாணவி மற்றும் வகுப்பு ஆசிரியையை கடிந்து கொண்ட அமைச்சர், இவரே இப்படி என்றால், கடைசி பெஞ்சில் இருப்பவர்கள் எப்படி…’ என்று விமர்சித்துவிட்டு புறப்பட்டு சென்றார்.
அமைச்சரின் அதிமேதாவித்தனமான அணுகுமுறைக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன. மற்ற அமைச்சர்களின் துறைகளில் தலையிடுவது, அதீத ரீல்ஸ் மோகத்தில் இருப்பது கீர்த்தனாவின் பொறுப்பற்ற செயலையே காட்டுகிறது என சக அமைச்சர்களே அவர் மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சர் கீர்த்தனாவின் அடுத்தடுத்த சர்ச்சை, முதல்வர் விஜய்க்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், இதனால் அவர் மீது கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தனது செயல்பாடுகளை கீர்த்தனா மாற்றிக்கொள்ளவில்லை என்றால், அவர் பதவி இழக்க நேரிடும் என தவெக வட்டாரங்கள் தெரிவித்தன.
