சென்னை: “ஆய்வு” என்ற பெயரில் தவெக-வினர் நடத்தும் அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார். அமைச்சர் கீர்த்தனா சமீபத்தில் அரசுப்பள்ளி ஒன்றில் ஆய்வு என்ற பெயரில் ஆசிரியர்களை குறை கூறியும், கடைசி வரிசை மாணவர்களை அவமதித்தும் கருத்து தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ள நயினார் நாகேந்திரன், ஆய்வு என்ற பெயரில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள அரசுப் பள்ளிக்கு கேமராக்களுடன் சென்று, அங்குள்ள குழந்தைகளுக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்பதைக் குத்திக் காட்டி, மாணவர்கள் முன்னிலையிலேயே அங்குள்ள ஆசிரியர்களின் கற்பித்தல் திறனைக் குறை கூறி, “Last Bench” மாணவர்களுக்கு எதுவும் தெரியாது என்று லேபிள் ஒட்டிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் ஆணவம் கடும் கண்டனத்திற்குரியது என குறிப்பிட்டுள்ளார்.
நேர்காணல் நடத்தும் ஸ்ட்ரிக்ட் கார்ப்பரேட் முதலாளி போல, படிக்கும் பிள்ளைகளிடம் துருவித் துருவி கேள்விகள் கேட்டு அவர்களைத் திணற வைப்பதற்கும், அங்குள்ள ஆசிரியர்களைக் குற்றவாளி கூண்டில் நிறுத்தி மகிழ்வதற்கும் பெயர் “ஆய்வு” கிடையாது, “அராஜகம்”.
செல்லுமிடமெல்லாம் அதிகாரிகளை விட, கேமராமேன்களைக் கையோடு அழைத்துச் செல்லும் தவெக அமைச்சர்கள், “ஆய்வு செய்வது எப்படி” என்பது குறித்த அடிப்படையை தெரிந்து கொள்வது அவசியம். அதைவிட்டு விட்டு படிக்கும் பிள்ளைகளிடம் இப்படி தாழ்வு மனப்பான்மையை விதைக்க முயலக் கூடாது.
களப்பணியில் அனுபவமற்ற தனது அமைச்சர்களுக்கு ஆய்வு செய்வதற்கான முறையான வழிமுறைகளை முதல்வர் தான் அறிவுறுத்த வேண்டும்! மேலும், தன்னைக் கற்றறிந்த ஞானி போல காட்டிக் கொள்வதற்காக அரசுப் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளை பகடைக்காய்களாகப் பயன்படுத்தி, அதை கேமராவில் பதிவு செய்து வெளியிட்ட அமைச்சர் கீர்த்தனா மீது முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.
