சென்னை: கரூரில் 41 பேர் கொடூரமாக இறக்க காரணமான சம்பவத்திற்கு தற்போதைய முதல்வர் விஜய் தாமதமாக வந்ததும் ஒரு காரணம் தான் என்று பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய நயினார் நாகேந்திரன், கரூருக்கு பகல் 12 மணிக்கு வருவதாக சொன்ன விஜய் இரவு 7 மணிக்கு வந்ததால் தான் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று சாடினார்.
எனவே என்னை பொறுத்தவரை கரூர் சம்பவத்திற்கு விஜய்யும் ஒரு காரணமாக இருப்பார். கரூர் மக்களை 7 மணி நேரம் விஜய் காக்க வைத்த நிலையில் மக்களுக்கு தண்ணீர் கூட கொடுக்கவில்லை. அதே போல அவ்வளவு உயிரிழப்புகள் நடந்த பிறகும் கூட, அந்த மக்களை சந்திக்காமல் அங்கிருந்து ஓடி சென்னைக்கு சென்றவர் தான் விஜய் என்றும் நயினார் நாகேந்திரன் நினைவுகூர்ந்தார்.
இதுபோன்ற ஒரு இக்கட்டான சூழலில் ஒரு தலைவராக இருப்பவர் தன்னை நம்பி வந்த தொண்டர்களை முடிந்த வரை காப்பற்ற வேண்டும். சம்பவ இடத்தில் இருந்து கொண்டே நீதி கேட்டிருக்க வேண்டும். ஆனால் அதை விடுத்தது சம்பவ இடத்திலிருந்து ஓடி விட்டு, பின் இறந்தவர்களின் குடும்பத்தை தன்னை வந்து சந்திக்க செய்வதெல்லாம் எப்படி எடுத்து கொள்வது என தெரியவில்லை என்றார்.
மேலும், தமிழகத்தில் தினந்தோறும் படுகொலைகள், பாலியல் குற்றங்கள், போதை பொருள் நடமாட்டம் மற்றும் இதனால் நிகழ்த்தப்படும் கொடூர குற்றங்கள் என சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி இருக்கும் நிலையில், முதல்வர் விஜய் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதே என் கேள்வி. மாநிலம் முழுவதும் ஒரே நாளில் 17 பாலியல் குற்றங்கள் வரை பதிவாகியது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நீங்கள், குதிரை பேரம் நடத்தி எப்படியாவது ஆட்சியை தக்கவைத்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் நீங்கள், மக்களுக்காக என்ன செய்ய போகிறீர்கள் என்பது தான் நாங்கள் கேட்கும் கேள்வி.
