தா.பழூர், ஜூலை 8:அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் கோடாலி கருப்பூர், சோழமாதேவி, அன்னகாரன் பேட்டை, இடங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பயிர் செய்து வருகின்றனர். மோட்டார் பாசனத்தை முழுமையாக நம்பி குறுவை பயிர் செய்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக மும்முனை மின்சாரம் சரியாக வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் காய்ந்து கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கவலை அடைந்த விவசாயிகள் ஏற்கனவே தா.பழூர் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து சில நாட்கள் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் தொடர்ச்சியாக மும்முனை மின்சாரத்துக்கு தட்டுப்பாட்டு நிலவி வந்ததாக தெரிகிறது. இதனால் நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி மேலும் கருகும் நிலை ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த சோழமாதேவி, கோடாலி கருப்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் தா.பழூர் உதவிமின் பொறியாளர் அலுவலகத்தின் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது பட்டை நாமம் அணிந்தும், கையில் திருவோடு ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கொளுத்தும் வெயில் என்று பாராமல் விவசாயிகள் போராட்டம் நடத்தியும் மின்சார துறையிலிருந்து அதிகாரிகள் யாரும் வராததால் அதிருப்தி அடைந்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
மும்மூனை மின்சாரம் வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை திரட்டி அரியலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக எச்சரித்தனர். விவசாயிகளின் நூதன போராட்டத்தால் தா.பழூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தா.பழூர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். மின்துறை அதிகாரிகள் வந்து தீர்வு சொன்னால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என கூறி கோஷங்களை எழுப்பி போராட்டத்தை தொடர்ந்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் உதவி செயற்பொறியாளர் பாக்கியராஜ் காலையில் 6 மணி நேரம், மாலை 6 மணி நேரம் என தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் 2 மணி நேர போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.
