தலைமறைவானவரை பிடிக்க சென்றபோது சிறப்பு எஸ்ஐ மீது சரமாரி தாக்குதல்

 

சோழிங்கநல்லூர், ஜூலை 9: கே.கே.நகரில் பி-கேட்டகிரி ரவுடியை பிடிக்க முயன்ற போது, சிறப்பு எஸ்ஐயை சரமாரியாக தாக்கிய ரவுடி உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.கே.கே.நகர் கன்னிகாபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (எ) நாய் மணிகண்டன் (33). பி-கேட்டகிரி ரவுடியான இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் தலைமறைவாக இருந்த ரவுடி மணிகண்டன் அவரது வீட்டிற்கு நேற்று அதிகாலை வருவதாக கே.ேக.நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி கே.கே.நகர் சட்டம் ஒழுங்கு சிறப்பு எஸ்ஐ பழனி மற்றும் தலைமை காவலர் நித்தியானந்தம் ஆகியோர் நேற்று அதிகாலை 3 மணிக்கு ரவுடி மணிகண்டன் வீட்டிற்கு சென்றனர். அப்போது காரில் வந்த மணிகண்டன், போலீசார் நிற்பதை பார்த்து அவர்கள் மீது காரை மோதுவதுபோல் வந்து நிறுத்தியுள்ளார். உடனே சிறப்பு எஸ்ஐ பழனி, ரவுடி மணிகண்டனை பிடிக்க முயன்றபோது, காரில் வைத்திருந்த பட்டாக்கத்தியை எடுத்து வெட்ட முயன்றார்.

இதை கவனித்த சிறப்பு எஸ்ஐ பழனி, ரவுடியிடம் இருந்து பட்டாக்கத்தியை பிடிங்கினார். இதனால் ஆத்திரமடைந்த ரவுடி மணிகண்டன் மற்றும் அவருடன் வந்த 2 பேரும் சிறப்பு எஸ்ஐயை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த சிறப்பு எஸ்ஐ பழனியை, தலைமை காவலர் நித்தியானந்தனம் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்.பின்னர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கே.ேக.நகர் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி தப்பியோடிய ரவுடி மணிகண்டன் உட்பட 2 பேரை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார் மற்றும் பட்டாக்கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தலைமறைவாக உள்ள மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: