கருவேல மரங்கள் அழிக்கும் திட்டம் செயல்படுத்த வேண்டும்: விவசாயிகள் எதிர்பார்ப்பு

 

காளையார்கோவில், ஜூலை 3: காளையார்கோவிலை சுற்றியுள்ள கிராமங்களில் அதிகளவு சீமைக் கருவேல மரங்கள் உள்ளன. இதனை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்று விவசாயிகள் கூறுகிறார்கள். காளையார்கோவில் ஒன்றியம் 360க்கும் மேற்பட்ட கிராமங்களைக் கொண்ட பெரிய ஒன்றியம். இவ்ஒன்றியத்தில் அதிகப்படியான மக்கள் விவாயத்தைச் சார்ந்தே வாழ்கின்றனர். விளைநிலங்களில் சீமைக் கருவேல மரங்களின் அதிகப்படியான வளர்ச்சி காரணமாக விவசாயம் செய்ய முடியாமல் ஒவ்வொரு ஆண்டும் நிலத்தைச் சுத்தம் செய்யும் நிலை ஏற்படுகிறது.

இதனால் மண் மலட்டுத் தன்மை ஆவதுடன் நிலத்தடி நீரும் அதிகளவு உறிஞ்சப்படுவதினால் விளைச்சல் பாதிப்படைகிறது. சீமைக் கருவேல மரங்களை வேருடன் அழித்தால் மட்டுமே விளைநிலங்களைக் காப்பாற்ற முடியும். இதற்கான இயந்திரச் செலவு அதிகமாக இருப்பதால், போதிய வசதியில்லாத விவசாயிகள் அழிக்காமல் விட்டு விட்டனர். இதைக்கருத்தில் கொண்டு சில வருடத்திற்கு முன்னால் சீமைகருவேல மரங்களை அழிப்பதற்கு கடந்த சில வருடங்களுக்கு முன் தாலுகா அலுவலகத்தின் மூலமாக ஏலம் விடப்பட்டன.

சீமைகருவேல மரங்களை முழுமையாக வெட்டாமலும், வெட்டிய மரத்தின் வேர்பகுதிகளை தோண்டாமலும் விட்டு விட்டனர். இதனால் தற்போது பெய்த சிறு மழைக்கு அதிகமாக கருவேல மரங்கள் முளைத்து உள்ளன. இதே நிலை தொடர்ந்தால் வரும் காலங்களில் விவசாயம் செய்வதற்கான நிலங்கள் குறைந்து கருவேல மரங்கள் மட்டுமே நிலங்களில் வளரக்கூடிய நிலை ஏற்படும். அரசு நடவடிக்கை எடுத்து சீமைக் கருவேல மரங்களை வேருடன் அழித்தால் மட்டுமே விளைநிலங்களைக் காப்பாற்ற முடியும் என விவசாய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: