புளியங்குடியில் பணி முடிந்தும் சிஎன்ஜி கேஸ் நிரப்ப நள்ளிரவு வரை காத்திருக்கும் அரசு பஸ் ஓட்டுநர்கள்

 

புளியங்குடி, ஜூலை 6: புளியங்குடியில் சிஎன்ஜி பங்கில் கடும் கூட்டம் வரிசை காரணமாக அரசு பஸ்களில் கேஸ் நிரப்ப நேரமாவதால் இரவு பணி முடிந்தும் வீட்டிற்கு செல்ல முடியாமல் அரசு ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகின்றனர். புளியங்குடி பணிமனையில் சுமார் 7 சிஎன்ஜி பேருந்துகள் நாகர்கோவில், கோவில்பட்டி, அம்பாசமுத்திரம், வில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. புளியங்குடியில் ஒரேயொரு சிஎன்ஜி பெட்ரோல் பங்க் மட்டுமே ஊருக்கு வெளியே உள்ளது. அதிகாலையில் சுமார் 4 மணிக்கு பேருந்தை இயக்க வரும் ஓட்டுநர்கள் இரவு 9 மணி வரை பணி முடித்து மறுநாள் காலையில் பேருந்தை இயக்குவதற்கு தோதுவாக கேஸ் நிரப்பிவிட்டு செல்லும்படி அதிகாரிகளால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் இரவு பணி முடிந்தும் பஸ் ஓட்டுநர்கள் சிஎன்ஜி கேஸ் நிரப்புவதற்காக நீண்டநேரம் பெட்ரோல் பங்குகளில் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது சிஎன்ஜி வாகனங்களின் வருகை அதிகரித்துள்ளதால் சிஎன்ஜி கேஸ் நிரப்பும் பங்குகளில் இரவு நேரமும் நீண்ட வரிசை காணப்படுகிறது. இதனால் ஓட்டுநர்கள் கேஸ் நிரப்ப பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சுமார் 2 மணி நேரம் வரை கேஸ் நிரப்ப வரிசையில் நிற்க வேண்டிய நிலை இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் ஓட்டுநர்களின் ஓய்வு நேரம் பாதிக்கப்படுவதுடன், உடல் சோர்வு மற்றும் மனஅழுத்தமும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. எனவே, இந்த பிரச்னைக்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும். சிஎன்ஜி கேஸ் நிரப்ப தனியாக மாற்று ஓட்டுனர்களை நியமித்து ஓட்டுனர்களின் பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என்று பேருந்து ஓட்டுநர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related Stories: