கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பீகார் வாலிபர்கள் கைது

 

தாம்பரம், ஜூலை 6: பெரும்புதூர் அடுத்த சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சோமங்கலம் மற்றும் புதுநல்லூர் பேருந்து நிலையம் அருகே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில், புதுநல்லூர் பஸ் நிலையம் அருகே நின்றிருந்த வடமாநில வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். இதில், அவரிடம் சிறிய கஞ்சா பொட்டலங்கள் இருப்பதை போலீசார் கண்டு பிடித்தனர். பின்னர் அவனை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரனை நடத்தியதில், பீகார் மாநிலத்தை சேர்ந்த பினய் குமார் (23) என்பதும், தனது நண்பரான அதே மாநிலத்தை சேர்ந்த சூரஜ் குமார் (30) என்பவருடன் சேர்ந்து ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் வடமாநில ஊழியர்களுக்கு கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

மேலும் பீகாரில் இருந்து மொத்தமாக சென்னைக்கு ரயில் மூலம் கடத்தி வந்து, அதனை சிறிய பொட்டலங்களாக பிரித்து ஒரகடம் மற்றும்  பெரும்பத்தூர் பகுதிகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்ததையும் ஒப்புகொண்டதை அடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த சோமங்கலம் போலீசார் அவர்களிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். மேலும், பினய்குமார், சூரஜ் குமார் ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: