தண்டையார்பேட்டை, ஜூலை 6: சென்னை காசிமேட்டில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் நேற்று அதிகாலை முதல் மீன் விற்பனை தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது. ஞாயிற்றுக் கிழமை வார விடுமுறை என்பதால் மீன்கள் வாங்க பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் மீன் பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. குறைந்த எண்ணிக்கை கொண்ட விசைப்படகுகள் கரைக்கு திரும்பியதால், குறைந்தளவு மீன்களே விற்பனைக்கு வந்தது. இந்நிலையில் கடந்த வார விலை நிலவரத்தை காட்டிலும், இந்த வாரம் விலை உயர்வாகவே காணப்பட்டது. அதன்படி வஞ்சிரம் ரூ.1300, பாறை ரூ.800, வவ்வால் ரூ.900, சங்கரா ரூ.700, நாயாரால் ரூ.600, நண்டு ரூ.500, கடம்பா ரூ.500, இறால் ரூ.550 என விற்பனை செய்யப்பட்டது.
மீன் விலை கடந்த வாரத்தை காட்டிலும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டாலும், பொதுமக்களும், வியாபாரிகளும் மீன்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். மேலும் இந்த வாரம் ஆடி மாதம் தொடங்க உள்ளதால், சென்னையை பொருத்தவரை ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் அம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெறும் என்பதால் வரும் வாரங்களில் மீன்களின் விலை இன்னும் உயரக்கூடும் என்று கூறப்படுகிறது.
