தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.7.49 லட்சம் பறிமுதல் கண்காணிப்பு பொறியாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

 

தூத்துக்குடி,ஜூலை 6: தூத்துக்குடி மாநகராட்சியில் கணக்கில் வராத பணம் ரூ.7.49 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கண்காணிப்பு பொறியாளர் திலகம், உதவி பொறியாளர் ராஜேஷ்கண்ணன் உள்பட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு
பதிவு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அலுவலகங்களில் உள்ள பொறியியல் பிரிவில் டிஎஸ்பி பீட்டர் பால்துரை தலைமையில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கடந்த 2ம் தேதி திடீரென அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மாலை 4 மணியளவில் துவங்கிய சோதனை இரவு 8 மணி வரை சுமார் 4 மணி நேரம் நீடித்தது.

இந்த சோதனையில் மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் திலகம், உதவி பொறியாளர் ராஜேஷ் கண்ணா ஆகியோரது அலுவலக அறைகளில் கணக்கில் வராத பணம் ரூ.7 லட்சத்து 49 ஆயிரத்து 900 வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக லஞ்ச ஒழிப்பு போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த அதிகாரிகளிடமும் அலுவலக ஊழியர்கள் சிலரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அன்று மாநிலம் முழுவதும் 41 மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் இந்த சோதனை நடந்தது. ஆனால் அதிகபட்சமாக தூத்துக்குடி மாநகராட்சியில் மட்டும் ரூ.7 லட்சத்து 49 ஆயிரத்து 900 கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து இவ்விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு பணியில் இருந்த மாநகராட்சி ஊழியர்கள் 17 பேரிடம் வாக்குமூலம் பெற்றனர். அதன்பேரில் தூத்துக்குடி மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் திலகா (59) மற்றும் இளநிலை பொறியாளர் ராஜேஷ்கண்ணன் (51) மற்றும் அலுவலக உதவியாளரான தூத்துக்குடி ஜெய்லானி தெருவைச் சேர்ந்த சேக்நய்னா முகம்மது (33) ஆகிய 3 பேர் மீது இரு பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

Related Stories: