சென்னை: சட்டப்பேரவை வளாகத்தில் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா நிருபர்களிடம் கூறுகையில், ‘‘சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் வெறும் ஒரே ஒரு வரியில் எங்கள் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்துவிட்டு, உடனடியாக கிளம்பி ஓடிவிட்டார். நாங்கள் எங்களுடைய ஆதாரங்களைக் காண்பிப்பதற்குள் அவர்கள் சென்றுவிட்டதால், எங்களால் அப்போது அங்கு பதில் பேச முடியாமல் போனது’’ என்றார். உடனே, ‘‘எதிர்க்கட்சி தலைவர் பேசும் போது சரியாக 2.27 மணி, அப்போது நீங்கள் பேரவை அரங்கில் இருந்தீர்கள். ஆனால் அங்கு ஏன் பதிலளிக்கவில்லை’’ என்ற நிருபர்கள் கேள்விக்கு, ‘‘பேசிக்கொண்டிருந்தவர் எழுந்து போய்விட்டார்’’ என தவறான பதிலளித்தார்.
‘‘விண்டோ சிஸ்டம் கடந்த ஆட்சியிலேயே இருந்ததே’’ என்ற கேள்விக்கு, ‘‘அதை யாரும் பயன்படுத்தவில்லை, நாங்கள் தான் பயன்படுத்த போகிறோம். அதேபோல் கைடன்ஸ் அமைப்பும் தொடர்ந்து இருக்கும். தலைமை செயலாளர் தலைமையில் கூடுதல் ஒரு குழு அமைக்கப்படுவது இன்னும் தொழிற்துறை சிறப்பாக செயல்படவேண்டும் என்பதாற்காக தான்’’ என்றார். ‘‘திமுக ஆட்சியிலேயே தொழில் நிறுவனங்கள் சென்றதாக நீங்கள் கூறுவது போலிருந்தால், நீங்கள் எத்தனை நிறுவனத்திடம் பேசி தொழில் தொடங்க மீண்டும் அழைத்துள்ளீர்கள்’’ என்ற கேள்விக்கு, ‘‘ஆதாரத்தோடு பேசும் என்னைய நம்பமாட்டீங்க, ஆனால் ஆதாரம் இல்லாமல் பேசுபவர்களிடம் கேள்வி கேட்கமாட்றீங்க’’ என்றார்.
‘‘எத்தனை நிறுவனம் என சொல்ல முடியுமா’’ என்ற கேள்விக்கு, ராயல் என்பில்டு நிறுவனத்திற்கிட்ட நீங்க கொஞ்சம் போன் போட்டு பேசுறீங்களா? இதற்கு எல்லாத்துக்கும் ‘அந்த ஒரு ரீலே போதும்’’ என சொல்லிவிட்டு பாதியிலேயே சென்று விட்டார். பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படுமா? என்ற கேள்விக்கு, ஏற்கனவே எங்களிடம் இருந்து அறிக்கை கொடுத்துள்ளோம், அதுதான் எங்ளின் நிலைப்பாடு. அந்த நிலைப்பாட்டில் தான் நாங்கள் இருப்போம். கடந்த 40 நாட்களில் தமிழ்நாட்டில் இருந்து எந்த தொழில் நிறுவனங்களும் வேறு எங்கும் செல்லவில்லை என்றார்.
