சென்னை: தனியார் மயம் எதிர்த்து நெல்லை, மதுரை, ஈரோட்டில் தூய்மை பணியாளர்கள் தவெக அரசை கண்டித்து போராட்டம் நடத்தினர். தமிழ்நாட்டில் 25 மாநகராட்சிகள் உள்ளன. இந்நிலையில் தாம்பரம், ஆவடி, ஓசூர், வேலூர், கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், மதுரை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 12 மாநகராட்சிகளில் தூய்மை பணிகளை தனியார்மயமாக்க தவெக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக டெண்டர் வரவேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகளில் தூய்மை பணிக்கு குடியிருப்பாளர்களிடம் தனி தொகையை வசூலித்துக் கொண்டு தூய்மை பணிகளை தனியாருக்கு விடுவதற்கு தூய்மை பணியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில், நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று தூய்மை பணியாளர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தூய்மை பணிகளை தனியாருக்கு விடக்கூடாது என தவெக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நெல்லை மாநகராட்சியில் 1,700க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணி செய்து வருகின்றனர். தூய்மை பணியாளர்களை தனியார் நிறுவனம் மிகவும் கொத்தடிமையாக நடத்தி வருகிறது. தூய்மை பணியாளர்களுக்கு குறிப்பாக இஎஸ்ஐ, பி.எப்., காப்பீடு மற்றும் சரியான மாத ஊதியம், வார விடுமுறை உள்ளிட்ட எதுவும் வழங்கப்படுவதில்லை.
எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய திட்டங்கள் எதுவுமில்லை. சில திட்டங்களில் பிடிக்கக்கூடிய பணமும் தூய்மை பணியாளர்களுக்கு கிடைப்பதில்லை. தூய்மை பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதில்லை. வாரத்தில் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுவதில்லை. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் கேட்டால் அவர்கள் எங்களுடைய பணியாளர்கள் இல்லை என மடைமாற்றம் செய்கின்றனர். எனவே தொழிலாளர் நலச்சட்டங்களுக்கு எதிரான செயலாக இருப்பதால் இதை தடுத்திடும் வகையில் தூய்மை பணியாளர்களை அரசு பணியாளர்களாக நிரந்தரப்படுத்த வேண்டும்.
தூய்மை பணியாளர்களுக்கு தினமும் குறைந்தபட்ச ஊதியம் ரூ.750 வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் மாநகராட்சிகளில் தூய்மை பணியாளர்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் தூய்மை பணியாளர்களுடன் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.
மதுரை: ‘தூய்மை பணிகளில் தனியார்மயத்தை கைவிட வேண்டும். மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் சுகாதாரம், பொறியியல் பிரிவு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். பகல் 12.30 மணிக்கு மேல் பயோ-மெட்ரிக் முறையை கைவிட வேண்டும். தனியார் ஒப்பந்த நிறுவனம் தொழிலாளர்களுக்கு குறைத்து வழங்கிய 4 மாத நிலுவை ஊதியத்தை மாநகராட்சி நிர்வாகம் பெற்றுத் தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று மதுரை மாநகராட்சி மைய அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் சிஐடியு மாநகராட்சி தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் பாலசுப்ரமணியன், மீனாட்சிசுந்தரம் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மேலும், தூய்மை, பொறியியல் பிரிவு பணியாளர்கள் மாநகராட்சியை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள், தனியார் ஒப்பந்த நிறுவனத்தினர், மாநகராட்சி துணை கமிஷனர், சுகாதாரத்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், பயோமெட்ரிக் முறைக்கு மாற்றாக வருகைப் பதிவேடு பயன்படுத்துவது; ஆகஸ்ட் மாதத்துடன் தனியார் நிறுவன ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வது;
வார்டுகளில் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைளை நிறைவேற்றுவதாக உறுதியளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மூன்றரை மணி நேரம் நடந்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. மாநகராட்சி பகுதியில் தினமும் 250 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சி சார்பில் ஒப்பந்த அடிப்படையில் 1200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தினக்கூலியாக தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் 500க்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்களும் உள்ளனர். இவர்கள் வார்டு வாரியாக பிரிக்கப்பட்டு தூய்மை பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். வீடு வீடாக சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் ஈரோடு உள்ளிட்ட 12 மாநகராட்சிகளில் தூய்மை பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஈரோடு மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், மாநகராட்சி மைய அலுவலகத்தில், நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மாநகராட்சி பகுதியில் தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் விடுவதை கைவிட வேண்டும். அதற்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும். 480 நாட்கள் பணியாற்றிய தினக்கூலி பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின் அவர்களை சமாதானம் செய்து அனுப்பினார்.
ஓட்டு போட்டோம்… தெருவில் நிற்கிறோம்…
தூய்மை பணியாளர்கள் கூறுகையில், “எங்களது பணியை பிடுங்க தவெக அரசும், மாநகராட்சியும் முடிவு செய்து, குப்பை அள்ளும் பணியை தனியாருக்கு கொடுக்கிறது. இதனால் எங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. சுகாதாரத் துறை, நெடுஞ்சாலைத் துறை, அமைச்சர்கள் பங்கேற்கும் விழா என அனைத்து நிகழ்வுகளிலும் எங்களைப் பயன்படுத்திக் கொண்டாலும் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை. முதலமைச்சர் விஜய் பணி நிரந்தரம் பண்ணுவாருன்னு ஓட்டு போட்டோம். ஆனால், இன்னைக்கு தெருவில் நிற்கிறோம். எங்களுக்கு வேற எந்த நல்லதையும் பண்ண வேண்டாம். பணி நிரந்தரம் செய்தால் போதும்” என்றனர்.
தனியார்மயத்தை கைவிட மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு 12 மாநகராட்சி பகுதிகளில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்க ஆய்வு செய்வதற்காக ஒப்பந்தப் புள்ளிகள் கோரியிருக்கிறது. இது தனியார்மயத்தை நோக்கிய முதல் படியாகும். தேர்தலுக்கு முன்னர் சென்னை மாநகராட்சி தூய்மைப்பணி தொழிலாளர்கள் போராடும் போது தவெக அதை ஆதரித்திருக்கிறது. இந்த பின்னணியில், இந்த தனியார்மய முயற்சி முற்றிலும் நியாயமற்றதாகும். ஏழை மற்றும் அடிமட்ட குடும்பங்கள் நிரந்தர வருவாய் ஈட்ட ஈடுபடும் இந்த தொழிலை தனியார்மயமாக்குவது பொருத்தமற்றது. எனவே, தூய்மைப் பணியை தனியார்மயமாக்கும் முயற்சியை முழுவதுமாக கைவிட வேண்டும் என தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் வலியுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
