தமிழக முதல்வர் விஜயின் தனிச் செயலாளராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்: அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 

சென்னை: தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் தனிச் செயலாளராக ஜெகதீஷ் பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வர் ஜோசப் விஜயின் தனி செயலாளராக ஜெகதீஷ் பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசின் பொதுத்துறை முதன்மை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர் பிறப்பித்துள்ளார். அதில்,‘ முதல்வர் ஜோசப் விஜயின் தனி செயலாளராக (அரசியல்) ஜெகதீஷ் பழனிசாமி கடந்த மே 12ம் தேதி நியமிக்கப்பட்டார். இது தொடர்பான நிபந்தனைகள், விதிமுறைகள் பின்னர் தனியாக வெளியிடப்படும்,’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெகவின் தேர்தல் வியூகம், வார் ரூம் பணிகளை ரூட் அமைப்பின் நிறுவனர் ஜெகதீஷ் பழனிசாமி செய்து வருகிறார். விஜயின் சினிமா முதல் அரசியல் வரை கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக விஜயின் நிழலாகவும், அவரது மிக நெருங்கிய மேலாளராகவும் பயணித்து வருகிறார். தவெகவின் தேர்தல் வெற்றிக்காகத் திரைமறைவில் உழைத்த ஜெகதீஷுக்கு தற்போது கோட்டையிலும் மிக முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக ஜெகதீஷ் பழனிசாமியும் நேற்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவுகளையும் வெளியிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ரத்தன் பண்டிட் என்ற ஜோதிடரை தனது (முதல்வரின் அரசியல் பிரிவு) சிறப்பு பணியாளர் அதிகாரியாக கடந்த மாதம் 12ம் தேதி விஜய் நியமித்தார். இதற்கு சட்டப்பேரவையிலும், சமூக வலைத்தளங்களிலும் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அந்த பதவியில் இருந்து ரத்தன் பண்டிட்டை நீக்கி அவர் உத்தரவிட்டார். இந்தநிலையில் முதல்வரின் தனி செயலாளராக (அரசியல்) ஜெகதீஷ் பழனிசாமி நியமிக்கப்பட்டிருப்பது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Related Stories: