திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு: ஐகோர்ட் கிளையில் தமிழ்நாடு அரசு தகவல்

 

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற ராம.ரவிக்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டதால் மாவட்ட நிர்வாகம், கோயில் நிர்வாகம் தரப்பில் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதேபோல், தனி நீதிபதியின் உத்தரவை நிறைவேற்றாத காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் கோயில் அலுவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த வழக்கை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து வருகிறார்.

தீபம் ஏற்றுவது தொடர்பாக தனி நீதிபதியின் உத்தரவை இரு நீதிபதிகள் பெஞ்சும் உறுதி செய்திருந்தது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘தீபம் ஏற்றும் விவகாரத்தில் இரு நீதிபதிகள் உத்தரவை நிறைவேற்றுவதில் என்ன பிரச்னை உள்ளது? இந்த விவகாரத்தை பிரச்னையாகவே வைத்திருக்க விரும்புகிறீர்களா?’’ என்றனர்.

கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாலசுப்ரமணி ஆஜராகி, ‘‘இந்த விவகாரத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக குறிப்பிட்ட நடைமுறை பின்பற்றப்படுகிறது. அப்படியிருக்கும்போது புதிதாக ஒரு நடைமுறையை எப்படி உடனடியாக பின்பற்ற முடியும். அது இப்ேபாதைக்கு இயலாது. பழைய நடைமுறையை தொடர்வதா அல்லது புதிய முறையை நடைமுறைபடுத்துவதா என்பது குறித்து முடிவெடுக்கப்பட வேண்டியுள்ளது. இந்த விவகாரத்தில் கோயில் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது’’ என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘இருதரப்பும் அமைதியாக இந்த விவகாரத்தை கையாண்டு இருக்கலாம். ஏன் இதை நிலுவையிலேயே வைத்திருக்க விரும்புகிறீர்கள்? தர்கா, கோயில் தரப்பில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக கொண்டு செல்லலாமே’’ எனக் கூறினர். பின்னர் தனி நீதிபதியின் உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து விசாரணையை ஜூலை 27க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: