மேட்டூர், ஜூன் 22: மேட்டூரில் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்த ரவுடியை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது மனைவி, மகள், மருமகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேட்டூர் அருகே உள்ள மாசிலாபாளையத்தை சேர்ந்தவர் ஜான்போஸ்கோ(53). இவர் மீது மேட்டூர் மற்றும் கொளத்தூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
நேற்று காலை, ஜான்போஸ்கோ கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபடுவதாக மேட்டூர் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மேட்டூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டு, பதுக்கி வைத்திருந்த மது பாட்டில்களை கைப்பற்றி, ஜான்போஸ்கோவை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
