சேலம், ஜூன் 22: சேலம் பொன்னமாபேட்டை வாய்க்கால் பட்டறையைச் சேர்ந்தவர் பழனிசாமி(85). நெசவு தொழிலாளி. இவரது மனைவி காஞ்சனா. கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 3 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். 6 பேருக்கு திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். 3வது மகன் சீனிவாசன்(29), பிகாம் பட்டதாரி. இவர் மட்டும் பெற்றோருடன் வசித்து வந்தார். வெள்ளி தொழில் செய்து வந்த சீனிவாசன் அதில் நஷ்டம் ஏற்பட்டதால், கொண்டப்பநாயக்கன்பட்டியில் டீக்கடை ஒன்றில் கேஷியராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, வேலை முடிந்து டீக்கடையிலேயே தூங்கி உள்ளார்.
நேற்று காலை ஊழியர்கள் வந்து பார்த்த போது, கடையில் சீனிவாசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்த கன்னங்குறிச்சி போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே சீனிவாசன் எழுதி வைத்திருந்த கடிதத்தில், என்னால் எல்லோருக்கும் சங்கடம். தினமும் அம்மா கனவில் வந்து, என்னை யாரும் பார்த்துக்கொள்ள மாட்டார்கள் என கூறுகிறார். அம்மாவின் இழப்பில் இருந்து என்னால் மீளமுடியவில்லை. இந்த உலகத்தில் என்னால் இனி வாழமுடியாது என எழுதி உள்ளார். இதுப்பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
