- சேலம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தமிழ்நாடு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம்
- முதுகலை சிறப்பு மருத்துவப் படிப்பு
- டி.என்.பி.
சேலம், ஜூன் 18: தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக்கல்லூரிகளில் சிறப்பு மருத்துவ படிப்பிற்கு மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. தமிழ்நாடு மருத்துவக்கல்வி ஆராய்ச்சி இயக்குநரகம் சார்பில் 2026-27ம் கல்வி ஆண்டிற்கான முதுகலை பட்டய சிறப்பு மருத்துவ படிப்பிற்கான (டிஎன்பி) மாணவர் சேர்க்கைக்கு அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் டிஎன்பி அங்கீகாரம் பெற்ற மாவட்ட தலைமை மருத்துவமனைகள், மாவட்ட துணை மருத்துவமனைகள் ஆகியவற்றில் டிஎன்பி மருத்துவ படிப்பில் சேரலாம். மாநில இடஒதுக்கீட்டு பிரிவில் பணியில் உள்ள அரசு மருத்துவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ள மருத்துவர்கள் ஆன்லைனில் வரும் 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பொதுப்பிரிவினர் விண்ணப்ப கட்டணமாக ரூ.3000 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினர் விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கையை பொறுத்தவரை, டிஎன்பி பிடி-சிஇடி 2026 தேர்வு மூலம் தரவரிசைப்பட்டியல் வௌியிடப்பட்டு, கவுன்சலிங் மூலம் இடங்கள் ஒதுக்கப்படும். சேர்க்கை ஒதுக்கீடு பெற்ற மருத்துவர்கள் ரூ.30ஆயிரம் பாதுகாப்பு முன்வைப்பு தொகை செலுத்த வேண்டும். பின்னர் கலந்தாய்வு நடைமுறைகள் முடிந்த பிறகு திருப்பி செலுத்தப்படும். இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளலாம் என்று மருத்துவ தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.
