தூத்துக்குடி, ஜூன் 16: கிரிக்கெட் விளையாடிய தகராறில் பெண்ணை கொலை செய்த வழக்கில் டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள வடக்கு முத்துலாபுரம் நாடார் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் அருண்ராஜ் (32). டிரைவரான இவர், கடந்த 30.4.2015 அன்று வீரமுத்து அம்மாள் (65) என்பவர் வீட்டின் அருகே நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடினார். அப்போது வீரமுத்து வீட்டுக்குள் பந்து விழுந்ததால், அதனை எடுக்க சென்றார். அருண்ராஜை, வீரமுத்து சத்தம் போட்டுள்ளார். இதனால் அருண்ராஜ், வீரமுத்துவை சாதியை சொல்லி திட்டியுள்ளார்.
மறுநாள் வீரமுத்து ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, அருண்ராஜ் பைக்கில் மோதுவதுபோல் சென்று வீரமுத்துவை அச்சுறுத்தி உள்ளார். இதனால் வீரமுத்து, ஊர் பெரியவர்களிடம் அருண்ராஜ் குறித்து புகார் கூறினார். இதையடுத்து ஊர் பெரியவர்கள் அருண்ராஜை கண்டித்துள்ளனர். இதில் அவர்களுக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 9.5.2015 அன்று வடக்கு முத்துலாபுரத்தில் உள்ள தோட்டம் அருகே வீரமுத்து, அவரது உறவினர் காளியம்மாள் ஆகியோர் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, காட்டுப்பகுதியில் மறைந்திருந்த அருண்ராஜ், வீரமுத்துவை மடக்கிப் பிடித்து கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார். காளியம்மாளையும் சாதியை சொல்லி திட்டி மிரட்டி உள்ளார். இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை, தூத்துக்குடி எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வஷித்குமார், குற்றம் சாட்டப்பட்ட அருண்ராஜிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் பூங்குமார் ஆஜரானார்.
