×

சேரன்மகாதேவியில் பைக்குகள் மோதலில் தொழிலாளி பரிதாப பலி

 

வீரவநல்லூர், ஜூன் 15: சேரன் மகாதேவி டாஸ்மாக் அருகே நடந்த பைக் விபத்தில் தொழிலாளி பலியானார். மகன் காயமடைந்தார். சேரன்மகாதேவி ஆலடி மணி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் மகன் கோபாலசுந்தர்(43). இவர் முன்னீர்பள்ளத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இவருக்கு பிரேமா என்ற மனைவியும் 2 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர். கோபாலசுந்தர் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் பத்தமடையிலிருந்து பைக்கில் தனது 2வது மகன் கமல்ராஜ் (15) என்பவருடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

சேரன்மகாதேவி டாஸ்மாக் கடை அருகே கோபாலசுந்தர் சென்ற போது எதிரே வந்த மற்றொரு பைக் இவர்கள் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கோபாலசுந்தருக்கு தலையில் பலத்த காயமும், கமல்ராஜிக்கு லேசான காயமும் ஏற்பட்டது. இதனையடுத்து சாலையில் சென்றவர்கள் இருவரையும் மீட்டு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். செல்லும் வழியிலேயே கோபாலசுந்தர் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த கமல்ராஜிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிந்து மற்றொரு பைக்கினை ஓட்டி வந்த கூனியூர் சாலைத்தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ஆதிகண்ணன்(37) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மகன் கண் முன்னரே தந்தை துடிதுடித்து இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : Cheran Mahadevi ,Veeravanallur ,Cheran Mahadevi TASMAC ,Gopalasunder ,Devaraj ,Cheran Mahadevi Aladi Mani Nagar ,Munneerpallam… ,
× RELATED பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறித்த ரவுடிகள் கைது