கழுகுமலை, ஜன. 22: கழுகுமலையில் ஒரு வழிப்பாதை கடைபிடிக்காததால் மீண்டும் போக்குவரத்து நெருக்கடி நிலவுகிறது. மேலும் பேருந்து நிலையத்துக்கு செல்லாமல் கோயில் முன்பே பஸ்கள் திரும்புவதால் விபத்து அபாயமும் காணப்படுகிறது. கழுகுமலையில் உள்ள குடவரை கோயிலான கழுகாசலமூர்த்தி கோயில், மலையில் உள்ள சமணர் சிற்பங்கள், வெட்டுவான் கோயில் உள்ளிட்டவை பிரசித்தி பெற்றவை. செவ்வாய் ஸ்தலமான இங்கு செவ்வாய்க்கிழமை மற்றும் பிரதோஷம், பவுர்ணமி ஆகிய தினங்களில் பக்தர்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். மேலும் கோவில்பட்டியில் இருந்து சங்கரன்கோவில், புளியங்குடி, செங்கோட்டை மற்றும் கேரள மாநிலம் புனலூர் செல்லும் வாகனங்கள் கழுகுமலை வழியாகத்தான் சென்று திரும்புகின்றன.
