பெரம்பூர், ஜூன் 22: வியாசர்பாடி ஏ கல்யாணபுரம் பகுதியில் மது போதையில் பொதுமக்களை அச்சுறுத்தி ரகளையில் சிலர் ஈடுபடுவதாக வியாசர்பாடி இன்ஸ்பெக்டர் ராஜ் பிரபுவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பேரை மடக்கி பிடித்தனர். அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் வியாசர்பாடி பி கல்யாணபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (26), பரத் (25) என்பதும், இருவரும் மது போதையில் பொதுமக்களை அச்சுறுத்தி ரகளையில் ஈடுபட்டு, பணம் பறித்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
