×

யுத்த பூமியில் அனாதரவாகப் பிரிந்த உயிர் ஓமனில் சிகிச்சை கிடைக்காமல் தமிழக மாலுமி மரணம்: கப்பலிலேயே அழுகும் உடல்

மும்பை: தூத்துக்குடி மாவட்டம், குரூஸ்புரத்தைச் சேர்ந்தவர் நிஷாந்த் உயிர்த்தநாதன் (35). இவரது மனைவி சராபின். இவர்களுக்கு 10 மாத ஆண் குழந்தையும், 4 வயது பெண் குழந்தையும் உள்ளனர். நிஷாந்த், கடந்த 15 ஆண்டுகளாக கப்பல் மாலுமியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு ஓமன் நாட்டின் ரோமனா நிறுவனத்தின் மூலம் ‘எம்.டி. செலிஸ்டியல்’ (MT Celestial) என்ற டேங்கர் கப்பலில் வேலைக்குச் சேர்ந்தார்.

ஈரான் போர் பதற்றம் காரணமாக, எம்.டி. செலிஸ்டியல் கப்பல் எங்கும் செல்ல முடியாமல் ஓமன் கடற்பகுதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 8-ம் தேதி நிஷாந்துக்குத் தொடர்ந்து வாந்தி ஏற்பட்டுள்ளது. கப்பலில் இருந்த மாத்திரை, மருந்துகளை உட்கொண்டும் வாந்தி நிற்கவில்லை. இதனால், அவர் மிகவும் பலவீனமடைந்தார். இதுகுறித்து, ஓமனின் ‘துக்ம்’ துறைமுகக் கட்டுப்பாட்டு அறைக்கும், கப்பல் நிறுவனத்திற்கும் கப்பலின் கேப்டன் ராஜேந்திர யாதவ் தகவல் தெரிவித்துள்ளார். கப்பல் நிறுவனம் எந்தப் பதிலும் அளிக்காத நிலையில், போர் பதற்றம் மற்றும் ஆங்காங்கே நடைபெறும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக அவருக்கு உரிய மருத்துவ உதவி கிடைக்கவில்லை.

இதற்கிடையே, கடந்த ஜூன் 11-ம் தேதி மதியம் சுயநினைவை இழந்த நிஷாந்த், மாலை 6 மணியளவில் சிகிச்சை கிடைக்காமல் கப்பலிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது சடலத்தையாவது உடனடியாக கப்பலில் இருந்து மீட்டு இந்தியா கொண்டு செல்ல கப்பல் கேப்டன் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. கப்பலில் சடலத்தை அழுகாமல் பாதுகாக்கும் ஃப்ரீசர் (Freezer) வசதி ஏதும் இல்லை. இதனால், குளிர்ந்த தண்ணீர் பாட்டில்களை நிஷாந்தின் உடல் மீது வைத்துள்ளனர். எனினும், அவரது உடல் அழுகத் தொடங்கியுள்ளதாக கப்பல் ஊழியர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காததே நிஷாந்தின் உயிரிழப்பிற்குக் காரணம் என்று ஃபார்வர்ட் சீமென்ஸ் யூனியன் ஆஃப் இந்தியா (FSUI) அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. உயிரிழந்து பல நாட்களாகியும் அவரது உடல் உரிய பாதுகாப்பின்றி கப்பலிலேயே இருப்பதாகவும், ஓமனின் துக்ம் துறைமுக அதிகாரிகள் எந்தப் பதிலும் அளிக்காமல் தகவல் தொடர்பைத் துண்டித்துள்ளதாகவும் அந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. உலக வர்த்தகத்தை இயங்கச் செய்யும் கடலோடிகள், தங்களுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லாத போர்களினால் மருத்துவப் பராமரிப்பின்றி பாதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டியுள்ள அந்த அமைப்பு, உடலை மீட்க உடனடி நடவடிக்கை தேவை என வலியுறுத்தியுள்ளது.

இதற்கிடையே, தனது கணவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது உடலை உடனடியாக இந்தியா கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் அவரது மனைவி சராபின் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

Tags : Oman ,Mumbai ,Nishant Vijirthanathan ,Khrushpur, Thoothukudi District, Mumbai ,Sarah ,Nishant ,
× RELATED அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில்...