×

விரைவில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட உள்ள நிலையில் லெபனான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதலால் பதற்றம்: இனி தாக்குதல் நடத்தக்கூடாது என்று இரு நாடுகளுக்கும் டிரம்ப் எச்சரிக்கை

தோஹா: ஈரானும் அமெரிக்காவும் அமைதி ஒப்பந்தம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் நேற்று திடீரென தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலால் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இனி தாக்குதல்களில் ஈடுபடக்கூடாது என்று இரண்டு நாடுகளுக்கும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த பிப்ரவரி 28ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணை ந்து கூட்டு தாக்குதல் நடத்தின. அதற்கு பதிலடியாக ஈரான் வளைகுடாவில் உள்ள நாடுகள் மீது தாக்கதல் நடத்தியது. அமெரிக்க படைகளின் தாக்குதலை தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால் உலக அளவில் எரிபொருள் விநியோகம் முடங்கியது.

இதையடுத்து பாகிஸ்தான் ஏற்பாட்டில் இஸ்லாபாத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில் முடிவு எதுவும் ஏற்படாததால் தோல்வியில் முடிந்தது. அமெரிக்கா- ஈரான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்காக பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் ஆசிம் முனீர் ஈரானுக்கு சென்று அங்கு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அமைதி பேச்சுவார்த்தை முயற்சிகள் நடந்து கொண்டிருக்கையில் தற்காலிக போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக டிரம்ப் அறிவித்தார். இந்த சூழலில் ஈரானுடன் 14ம் தேதி(நேற்று) கையெழுத்தாகும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்.

அமெரிக்க அதிபரின் அதிரடி அறிவிப்பைத் தொடர்ந்து, ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் அரசு ஊடகங்களுக்குத் தற்போதைய நிலவரம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்காவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் இறுதி நிலையை எட்டியுள்ளது உண்மைதான் என்றாலும், டிரம்ப் சொன்ன நாளில் கண்டிப்பாக கையெழுத்தாகாது என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார். எனினும் வரும் நாட்களில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கான சாத்தியக்கூறுகளை முற்றிலும் நிராகரிக்க முடியாது என்றும் ஈரான் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்த அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்பதால் கத்தாரை சேர்ந்த தூதுக்குழுவும் ஈரானுக்கு சென்றுள்ளதாக தகவல் வந்தது.

இந்த நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று இஸ்ரேல் திடீரென தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் கட்டிடம் இடிந்து 3 பேர் பலியானார்கள். 6 பேர் படுகாயமடைந்தனர். இதற்கு உடனடியாக பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் தெரிவித்தது. இதனால் மேற்காசியாவில் பதற்றம் ஏற்பட்டது. இந்த தாக்குதல் தொடர்பாக, இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து சமூக வலைதளங்களில் அவர் பதிவிடுகையில், ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் எட்டப்படுவதற்கான வாய்ப்புள்ளதால், இஸ்ரேலும் ஈரானும் தாக்குதல்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். லெபனானில் எங்கும் இஸ்ரேல் இனி தாக்குதல் நடத்தக்கூடாது. அதேபோல் ஹிஸ்புல்லா உட்பட வேறு எந்தத் தரப்பும் இஸ்ரேலுக்கு எதிராகத் தாக்குதல்களை நடத்தக்கூடாது. இது ஒரு நீண்ட மற்றும் அழகான அமைதியின் தொடக்கமாக இருக்கலாம். அதை நாம் வீணடித்துவிட வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார்.

ஈரான் பழமைவாதிகள் எதிர்ப்பு
இதற்கிடையே அமெரிக்காவுடன் ஏற்படுத்த விருக்கும் அமைதி ஒப்பந்தத்திற்கு ஈரானில் உள்ள பழமைவாதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த முடிவுக்கு எதிராக ஈரானிய அரசை கண்டித்து தெஹ்ரான்,மஷாத் உள்ளிட்ட நகரங்களில் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Tags : Trump ,Israel ,Lebanon ,Doha ,Iran ,United ,States ,
× RELATED குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த...