திருமலை: தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தை சேர்ந்தவர் 23வயது இளம்பெண். அதே மாவட்டம் ரகுநாதபாலம் மண்டலம் கோயதண்டா கிராமத்தை சேர்ந்தவர் ராம்பாபு(26). இருவருக்கும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. தினசரி சாட்டிங் செய்து வந்த நிலையில் இவர்களது நட்பு பின்னர் காதலாக மாறியது. இந்நிலையில் இளம்பெண்ணை சந்திக்கவேண்டும் என ராம்பாபு கூறியுள்ளார். இதனை நம்பி அவரை சந்தித்த இளம்பெண்ணிடம், திருமண ஆசைக்காட்டி ராம்பாபு பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். ஆனால் திருமணம் குறித்து இளம்பெண், கேட்டபோது ராம்பாபு தட்டிக்கழித்து வந்தார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இளம்பெண், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி ராம்பாபுவிடம் கேட்டுள்ளார். ஆனால் ராம்பாபு சரிவர பதில் அளிக்கவில்லையாம். இதனால் இளம்பெண் ஊர் பஞ்சாயத்திடம் முறையிட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ராம்பாபு மற்றும் அவரது தாய் விமலா ஆகியோர் இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து இளம்பெண் பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு ராம்பாபுவை நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
