கஞ்சா, மெத்தம்பெட்டமைன் விற்க முயன்ற வாலிபர் கைது: தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

கோவில்பட்டி: கோவில்பட்டியில் கஞ்சா மற்றும் மெத்தம்பெட்டமைன் போன்ற போதைப் பொருட்களை வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அப்போது அந்த வாலிபர், தன்னைத்தானே கல்லால் தாக்கி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மந்திதோப்பு சாலையில் போதைப்பொருட்கள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், கடந்த 11ம் தேதி இரவு போலீசார் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது இந்திரா காலனியில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே நின்றிருந்த வாலிபர், போலீசாரைக் கண்டதும் தப்பி ஓட முயன்றார். போலீசார் அவரைச் சுற்றி வளைத்தபோது, அவதூறாகப் பேசியதோடு, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மிரட்டல் விடுத்தார். இருப்பினும், போலீசார் அவரை அதிரடியாகப் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர் கோவில்பட்டி துளசிங்க நகர் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் விக்னேஸ்வரன் (29) என்பது தெரிந்தது.

அவரிடமிருந்து விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த 150 கிராம் கஞ்சா, 20 கிராம் மெத்தம்பெட்டமைன் ஆகிய போதைப்பொருட்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றபோது, திடீரென தரையில் கிடந்த கல்லை எடுத்து தனது நெற்றியில் பலமாகத் தாக்கித் தற்கொலைக்கு முயன்றார். இதில் காயமடைந்த அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Related Stories: