பாடாலூர்: பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே தகாத உறவுக்கு இடையூறாக இருந்த 9 வயது மகளை கழுத்தை நெரித்து கொலை செய்த தாயை பாடாலுார் போலீசார் இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன்(37) இவரது மனைவி நிஷாந்தி(26), இவர்களது மகள் கீர்த்திஷா (9). தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 5 வருடமாக குணசேகரனை பிரிந்து நிஷாந்தினி காரை சமத்துவபுரம் பகுதியில் தனியாக வசித்து வந்தார்.
பெரம்பலூரில் உள்ள கட்டுமான தொழிலாளர் சங்க அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த நிஷாந்திக்கு மணிகண்டன் (30) என்பவருடன் தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது உறவுக்கு கீர்த்திஷா இடையூறாக இருந்ததால் அவரது தாய் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு பின்னர், அவரை இதே பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, சாப்பிட்டு தூங்கியவர் மீண்டும் எழுந்திருக்காமல் பேச்சு மூச்சு இல்லாமல் இருப்பதாக மருத்துவரிடம் தெரிவித்தார்.
கீர்த்திஷாவை பரிசோதித்த மருத்துவர் கழுத்தை நெரித்து கொலை செய்ததற்கான அடையாளங்கள் உள்ளதாக பாடாலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பாடாலுார் போலீசார் கீர்த்திஷா சடலத்தை மீட்டு, பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, நிஷாந்தியின் தாய்மாமன் லோகநாதன் கொடுத்த புகாரின் பேரில் பாடாலுார் போலீசார் வழக்கு பதிந்து, நிஷாந்தியை கைது செய்து விசாரிக்கின்றனர்.
