சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.3766.24 கோடி மதிப்பீட்டில் 28,551 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன என அமைச்சர் ராஜ்குமார் கூறினார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் ராஜ்குமார் தலைமையில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் கு.ப.கிருஷ்ணன் முன்னிலையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் ராஜ்குமார் பேசும்போது, “தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சென்னையில் 21 திட்டப்பகுதிகளில் ரூ.1230.42 கோடி மதிப்பீட்டில் 7,179 அடுக்குமாடி குடியிருப்புகளும், இதர மாவட்டங்களில் 39 திட்டப்பகுதிகளில் ரூ.2535.82 கோடி மதிப்பீட்டில் 21,372 அடுக்குமாடி குடியிருப்புகள் என மொத்தம் ரூ.3766.24 கோடி மதிப்பீட்டில் 28,551 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.
ஆசிய வளர்ச்சி வங்கி திட்டத்தின் கீழ், 6 திட்டப்பகுதிகளில் ரூ.1030 கோடி மதிப்பீட்டில் 5457 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. புனரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.210 கோடி மதிப்பீட்டில் 215 திட்டப்பகுதிகளில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்காக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளை நல்ல தரத்துடனும், உறுதியிடனும், உரிய நேரத்தில் வழங்க வேண்டும்” என்றார்.
இந்த கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளர் கிர்லோஷ் குமார், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் ஸ்ரேயா பி.சிங், வாரிய இணை மேலாண்மை இயக்குநர் அனாமிகா ரமேஷ், வாரிய செயலாளர் வெங்கடேஷ், வாரிய நிதி ஆலோசகர் ஷண்முகநாதன், கண்காணிப்பு பொறியாளர்கள், நிர்வாக பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
