சென்னை: நீட் மறுதேர்வு நேரத்தை 15 நிமிடம் நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜூன் 21ம் தேதி நீட் மறு தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வு கால அளவு 180 நிமிடங்களில் இருந்து 195 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பகல் 2 மணிக்கு தொடங்கும் நீட் தேர்வு 5.15 மணிக்கு நிறைவடையும். தேர்வின்போது, கணக்கீடுகளை போட்டு பார்ப்பதற்கும், குறிப்புகளை எழுதுவதற்குமான ரப் ஒர்க் பேப்பர் இரண்டில் இருந்து நான்காக உயர்த்தப்பட்டுள்ளது.
இடது கை பழக்கம் கொண்ட தேர்வர்களின் வசதிக்கு ஏற்ப ரப் ஒர்க் பக்கங்களின் அமைப்பும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முன்பு இந்த பக்கங்கள் வினாத்தாள் புத்தகத்தின் இறுதியில் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், இனி அவை வினாக்கள் தொடங்குவதற்கு முன்பு 2 பக்கங்கள், இறுதியில் 2 பக்கங்கள் என இருக்கும். இது வினாத்தாளின் ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழி ஆகிய இரு பதிப்புகளிலும் இருக்கும் என தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) தெரிவித்துள்ளது.
