திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள, பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா நேற்று மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவ மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
பின்னர் காரில் புறப்பட முயன்ற அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் திடீரென முற்றுகையிட்டு சரமாரியாக புகார் அளித்தனர். மருத்துவமனையில் நோயாளிகளிடம் பணம் வசூலிக்கின்றனர். பிரசவ வார்டில் ரூ.1500 வரை பணம் கேட்கின்றனர். படுக்கை வசதியில்லாமல், பிரசவமான மறுநாளே பச்சிளம் குழந்தையுடன் தரையில் படுக்க வைக்கின்றனர்.
கழிப்பறைகளில் தண்ணீர் இல்லை. அதனால், மருத்துவமனைக்கு வெளியே திறந்தவெளி பகுதிக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது. குடிப்பதற்கும் தண்ணீர் இல்லை. வெளியில் பணம் கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டியிருக்கிறது என அங்கிருந்த பெண்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறியதால், என்ன செய்வது என தெரியாமல் திகைத்த அமைச்சர், டிரஸ் மாற்றிக்கொண்டு மதியம் மீண்டும் மருத்துவமனையை ஆய்வு செய்ய வருகிறேன் என சொல்லி சமாளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
