நாகை: நாகை அருகே தலையில் கல்லை போட்டு மூதாட்டியை கொலை செய்து பலாத்காரத்தில் ஈடுபட்ட ஆசாமி கைது செய்யப்பட்டார். நாகை நகரின் மைய பகுதியான அண்ணா சிலை அருகே மீன் மார்க்கெட் உள்ளது. இதன் அருகே 80 வயது நிறைந்த மூதாட்டி முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக வெளிப்பாளையம் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் சென்று பார்த்தபோது மூதாட்டியின் முகம் நாய் கடித்து சிதைந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.
அதில், நாகை வடக்கு நல்லியான் தோட்டத்தை சேர்ந்த சின்னப்பொண்ணு(80) என்பதும், அப்பகுதியில் மீன் வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது. போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பார்வையிட்டு விசாரித்தனர். மேலும் அப்பகுதியில் நேற்று சுற்றி திரிந்த ஒரு முதியவரை பிடித்து விசாரித்தனர். அதில், ராமநாதபுரத்தை சேர்ந்த ராமசாமி(65) என்பதும், நாகை சட்டையப்பர் வீதியில் உள்ள தனியார் முதியோர் காப்பகத்தில் தங்கி அப்பகுதியில் மீன் வியாபாரம் செய்வதும் தெரியவந்தது.
ராமசாமி மீன் வாங்க வரும்போது மூதாட்டி சின்னப்பொண்ணுவிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு மீன் மார்க்கெட் அருகே சாலையோரம் மூதாட்டி சின்னப்பொண்ணுவிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அதற்கு மூதாட்டி ஒத்துழைக்காததால் அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ராமசாமியை கைது செய்து நாகை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
