மனநலம் பாதித்த பெண்ணை கர்ப்பமாக்கிய தங்கை கணவர்: டிஎன்ஏ பரிசோதனையில் சிக்கினார்

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை நேதாஜி நகர், 2வது தெருவை சேர்ந்தவர் ரேணுகா (32). இவர், தனது மாமன் மகன் சுரேஷ் (38) என்பவரை, கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ரேணுகாவின் அக்கா சித்ரா (35), சற்று மனநலம் பாதிக்கப்பட்டு, இவருடன் தங்கி இருந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி சித்ரா, 6 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

இதனை அறிந்த ரேணுகா அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி சித்ராவிடம் விசாரித்த போது, சரிவர பதிலளிக்க தெரியாமல் இருந்துள்ளார். இதையடுத்து, ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் இதுபற்றி ரேணுகா புகார் அளித்தார். இந்த வழக்கு, வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, சித்ராவை கர்ப்பமாக்கிய நபர் குறித்து விசாரித்து வந்தனர்.

இதனிடையே, சித்ராவுக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், டிசம்பர் மாதம் 14ம் தேதி மஞ்சள் காமாலை நோயால் அவர் பரிதாபமாக இறந்தார். அப்போது, சந்தேகத்தின் பேரில், தங்கை கணவர் சுரேசுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, சித்ராவின் குழந்தைக்கு சுரேஷ் தான் தந்தை என தெரியவந்தது.இதையடுத்து போலீசார், சுரேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் தண்டையார்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: