ரூ.50 லட்சம் கேட்டு 2 வாலிபர்களை கடத்தி கொலை மிரட்டல்: போலீஸ்காரர்கள் உட்பட 4 பேர் கைது

கோவை: ரூ.50 லட்சம் கேட்டு வாலிபர்கள் இருவரை கடத்திய போலீஸ்காரர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை போத்தனூர் அடுத்த சீத்தனபுரம், இந்திரா நகரைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி (31). இவரது தம்பி நவீன் (29). இவர், வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கிருந்து ஆன்லைன் டிரேடிங் வேலை செய்து வந்தார். கடந்த 8ம் தேதி மதியம், பரமேஸ்வரியின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர், “உன் தம்பி நவீனை நாங்கள் கடத்தி வைத்துள்ளோம். அவர் உயிரோடு வேண்டும் என்றால் உடனடியாக ரூ.50 லட்சம் பணம் தர வேண்டும்” என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பரமேஸ்வரி, பதறியடித்துக்கொண்டு தம்பியின் வீட்டிற்குச் சென்று பார்த்தார். அப்போது, வீடு பூட்டப்பட்டிருந்தது. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. செல்போனில் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதற்கிடையே, நவீனின் நண்பர் நிர்மல்குமார் (29) என்பவரின் மனைவி ஜெனிதா, பரமேஸ்வரியைத் தொடர்பு கொண்டு, மதியம் 12 மணி முதல் தன் கணவரையும் காணவில்லை என தெரிவித்துள்ளார். தொடர்ந்து அன்று இரவு ஜெனிதாவின் செல்போனுக்கு நவீனின் எண்ணில் இருந்து ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய கடத்தல்காரர்கள், “நவீன் மற்றும் நிர்மல்குமார் ஆகிய இருவரையும் நாங்கள் தான் கடத்தியுள்ளோம். கேட்கும் பணத்தைக் கொடுக்காவிட்டால் இருவரையும் கொலை செய்துவிடுவோம்” என மிரட்டியுள்ளனர்.

இதனால், பயந்துபோன குடும்பத்தினர் உடனடியாக போத்தனூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார், வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரித்து வந்தனர். இதற்கிடையே, போலீசார் பணத்தை தயார் செய்து நவீன் மற்றும் நிர்மல்குமாரின் குடும்பத்தினரிடம் கொடுத்து கடத்தல்காரர்களிடம் எங்கு வர வேண்டும் என கேட்குமாறு கூறியுள்ளனர். கடத்தல்காரர்கள் திருப்பூர் வந்து பணத்தை கொடுத்து இருவரையும் மீட்டு செல்லும்படி தெரிவித்துள்ளனர். இதையடுத்து இருவரது குடும்பத்தினரும் திருப்பூர் சென்றனர். அவர்களை போலீசார் சாதாரண உடையில் பின் தொடர்ந்தனர். அப்போது, பணத்தை வாங்க வந்த இருவரை போத்தனூர் போலீசார் மடக்கி பிடித்தனர்.
அதில் அவர்கள் இருவரும் திருப்பூர் நல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ்காரர்களாக பணிபுரிந்து வரும் மோகன் (37) மற்றும் ஆனந்த் (38) என்பது தெரியவந்தது.

போலீசார் அவர்களை கோவை அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் நவீன் மற்றும் நிர்மல்குமார் ஆகியோரை திருப்பூரை சேர்ந்த காளிதாஸ் (31) மற்றும் ராம்குமார் (31) ஆகியோர் திருப்பூரில் ஒரு பகுதியில் அறையில் மறைத்து வைத்திருப்பதாக கூறியுள்ளனர். போலீசார் அதிரடியாக அங்கு சென்று இருவரையும் மீட்டு, கடத்தல்காரர்கள் காளிதாஸ் மற்றும் ராம்குமாரையும் பிடித்தனர். அவர்களை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் இருவரையும் கடத்தியதாகவும், தங்களுக்கு திருப்பூர் போலீஸ்காரர்கள் இருவரும் உதவியதாகவும் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து போலீசார், மோகன், ஆனந்த், காளிதாஸ் மற்றும் ராம்குமார் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆன்லைன் லாட்டரி விற்பனை;
கடத்தப்பட்ட நவீன் மற்றும் நிர்மல்குமார் பல்வேறு ஆன்லைன் வேலைகளை செய்து வந்துள்ளனர். அதேபோல தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனையிலும் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. அதில் மோசடியில் ஈடுபட்டதால் அவர்கள் கடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 

Related Stories: