இளம்பெண்ணிடம் அத்துமீறியதாக ரேபிடோ ஓட்டுநர் மீது சரமாரி தாக்குதல்: போலீசார் விசாரணை

தாம்பரம்: குரோம்பேட்டை, நாகல்கேணி, திருநகரை சேர்ந்தவர் விவேகா (29). இவர் நேற்று முன்தினம் இரவு ஈக்காட்டுத்தாங்கலில் இருந்து குரோம்பேட்டையில் உள்ள வீட்டிற்கு ரேபிடோ பைக்கில் பயணம் செய்தார். அப்போது, பைக் ஓட்டி வந்த அஸ்தினாபுரத்தை சேர்ந்த பிரவீன் குமார் (27) என்பவர் தன்னிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு விவேகா புகார் தெரிவித்தார். இது தொடர்பாக குரோம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில், அந்த பெண் 2 பைகளுடன் வாகனத்தில் ஏறியுள்ளார். ஒரு பையை பிரவீன்குமார் வாகனத்தின் முன்பகுதியில் வைத்துக் கொண்டார். மற்றொரு பையை அந்த பெண் கையில் வைத்துகொண்டு பயணித்துள்ளார். அப்போது ஆட்சேபனை இல்லையெனில் எனது தோள் மீது கை வைத்துக்கொள்ளுங்கள் என்று ஓட்டுநர் கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து அந்த பெண், பல்லாவரத்தில் இறங்கி விட்டார். சிறிது நேரத்தில் பிரவீன் குமாருக்கு அந்த பெண்ணின் நண்பர்கள் போன் செய்து பிரவீன்குமாரை குரோம்பேட்டைக்கு வருமாறு கூறியுள்ளனர். குறிப்பிட்ட இடத்திற்கு சென்றதும் அங்கிருந்த 5 பேர் சேர்ந்து ஓட்டுநரை கையால் சரமாரியாக தாக்கியதும், இதில் காயமடைந்த ஓட்டுநர் பிரவீன்குமார் தாம்பரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து இருவரும் தனிதனியாக அளித்த புகாரின்பேரில் குரோம்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: