திருச்சி: திருச்சியில் 9ம் வகுப்பு படிக்கும் 14வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். திருச்சியை சேர்ந்த 14 வயது சிறுமி 9ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் அந்த பகுதியில் கோயிலில் திருவிழா நடந்தது. இதில் பங்கேற்ற சிறுமியிடம் வாலிபர் ஒருவர் நைசாக பேச்சு கொடுத்து பேசினார். பின்னர் சிறுமியின் செல்போன் எண்ணை வாங்கி சமூக வலைதளங்களில் பின்ெதாடர்ந்து வந்தார். தொடர்ந்து இருவரும் செல்போனில் பேசி வந்தனர்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் காலை பள்ளிக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு வாலிபருடன் சிறுமி வந்தார். ஆனால், அவரை நாகமங்கலத்தில் உள்ள காட்டு பகுதிக்கு பைக்கில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். பின்னர் சிறுமியை வீட்டின் அருகே இறக்கி விட்டு சென்றார். இதற்கிடையில் சிறுமி பள்ளிக்கு வராதது குறித்து பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்டு ஆசிரியை தெரிவித்துள்ளார். வீட்டுக்கு வந்த சிறுமியிடம் பெற்றோர் தீவிரமாக விசாரித்ததில் நடந்த சம்பவத்தை சிறுமி கூறியுள்ளார்.
இதுகுறித்து பெற்றோர் புகாரின்படி கன்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். இதில் சிறுமியை பலாத்காரம் செய்தது திருச்சி நாகமங்கலத்தை சேர்ந்த பூபதி என்பதும், அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து பூபதியை நேற்று கைது செய்தனர். திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த சிறுமி போதை ஊசி, போதை மாத்திரை கொடுத்து 2 நாட்களுக்கு முன் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
