தண்டனை காலம் முடிந்த பிறகும் வங்கதேச சிறைகளில் வாடும் 150 இந்தியர்கள்

 

டாக்கா: வங்கதேச சிறைகளில் தண்டனை காலம் முடிந்த பிறகும் சுமார் 150 இந்தியர்கள் வாடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட சிறைச்சாலை புள்ளிவிவரங்களின்படி, 148 இந்தியர்கள் உட்பட 152 வெளிநாட்டினர் தங்கள் சிறை தண்டனை முடிந்திருந்தும் வங்கதேச சிறைகளில் தொடர்ந்து அடைக்கப்பட்டிருப்பதாக சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவர்களில் பலர் பல ஆண்டுகளுக்கு முன்பே தங்கள் தண்டனைக் காலத்தை முடித்து விட்டதாகவும், ஆனால் அதிகாரப்பூர்வ அடையாளச் சரிபார்ப்பு செயல்முறை மற்றும் நிர்வாக அல்லது தூதரக ரீதியிலான நடவடிக்கைகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக அவர்களின் சிறைவாசம் நீட்டிக்கப்பட்டதாகவும் கூறினார்.

இந்தியக் கைதிகளில் பெரும்பாலானோர் சட்டவிரோதமாக எல்லை தாண்டி நுழைந்தது போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். வங்கதேசத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஷரியத்பூர் மாவட்ட சிறையில் மட்டும் 17 இந்தியர்கள் தண்டனைக் காலம் முடிந்த பிறகும் தொடர்ந்து சிறையில் இருப்பதாக வங்கதேச செய்தி இணையதளம் கூறி உள்ளது. இந்தியா மட்டுமின்றி, தாய்நாடு திரும்பக் காத்திருக்கும் சிறைவாசிகளில் பாகிஸ்தான், மியான்மர் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் உள்ளதாக டாக்காவில் உள்ள சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Related Stories: