ஏழை நாடாக சித்தரிக்கப்பட்ட நிலையில் ஹாலிவுட் திரையில் இந்தியர்கள் ஆதிக்கம்: இந்திய வம்சாவளி நடிகை பிரியா ஜெயின் கருத்து

 

வாஷிங்டன்: சர்வதேச திரைத்துறையில் இந்தியர்களின் பங்களிப்பு வெறும் அடையாளமாக மட்டுமில்லாமல் ஆழமானதாக மாறி வருவதாக நடிகை பிரியா ஜெயின் தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளி அமெரிக்க நடிகையான பிரியா ஜெயின், ‘நாட் வித்தவுட் ஹோப்’, ‘டீப் வாட்டர்’ போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்ததன் மூலம் உலகளவில் கவனம் பெற்றவர். இதுவரை நான்கு முறை புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றுள்ள அவர், உலக அரங்கில் இந்தியர்களின் பிரதிநிதித்துவம் குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ஹாலிவுட் படங்களில் இந்தியா ஒரு ஏழ்மையான நாடாக மட்டுமே சித்தரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த நிலை மாறியுள்ளது. குறிப்பாக, ஐஸ்வர்யா ராய் பச்சன் முதல் ஆலியா பட் போன்ற இளம் தலைமுறை நடிகைகள் வரை கேன்ஸ் விழாவில் இந்தியாவிற்குப் பெரும் கவுரவத்தைத் தேடித் தந்துள்ளனர். திரையில் மட்டுமல்லாது, சர்வதேச ஃபேஷன் நிறுவனங்களின் தூதர்களாகவும், விளம்பர மாடல்களாகவும் இந்திய பெண்கள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளனர். ஹாலிவுட் திரைத்துறையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள் வெறும் கண்துடைப்பு நடவடிக்கை கிடையாது.

இந்திய நடிகர்கள் அவர்களின் திறமை மற்றும் அழகின் காரணமாகவே அங்கீகரிக்கப்படுகிறார்களே தவிர, அவர்கள் இந்தியர்கள் என்பதற்காக மட்டும் தேர்வு செய்யப்படவில்லை. விரைவில் ஒரு பாலிவுட் திரைப்படம் கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்டு அதில் தான் பங்கேற்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது’ என்றார். சர்வதேச திரையுலகில் இந்தியர்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவது இந்திய சினிமா உலகிற்கு ஒரு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.

Related Stories: