கோவில்பட்டி, ஜூன் 8: கோவில்பட்டியில் வீசிய பலத்த சூறைக்காற்றில் மரம் சாய்ந்து விழுந்ததில் கார் சேதமடைந்தது.கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடையை போன்று வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வெளியில் நடமாட முடியாமலும், இரவு நேரத்தில் கடும் புழுக்கம் காரணமாகவும் அவதிப்பட்டு வருகின்றனர். நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தபோதிலும், சில இடங்களில் பலத்த சூறைக்காற்று வீசியது.
இந்நிலையில் கோவில்பட்டி வெங்கடேஷ் நகரில் பலத்த காற்று வீசியதில் அங்கிருந்த வேப்பமரம் ஒன்று வேரோடு சாய்ந்து, அருகில் நிறுத்தியிருந்த கார் மீது விழுந்தது. இதில் காரின் மேற்கூரை சேதமடைந்தது. இது புதுஅப்பனேரி கிரீன்லேண்ட் அவென்யூ பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (57) என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரிய வந்தது. தகவல் அறிந்து கோவில்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வேரோடு சாய்ந்த மரத்தை அகற்றி காரை பாதுகாப்பாக வெளியே எடுத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
